புத்தகம் என்ன செய்யும்?

ராலேகான் சித்தி, மகாரஷ்ட்ரத்தின் அகமது நகர் மாவட்டத்திலுள்ள வறண்ட கிராமங்களில் ஒன்று. மொத்தக் கிராமத்திலும் ஐந்நூறு ஏக்கர் நிலம்தான் பாசன வசதியுள்ள நிலம். எஞ்சியவை வானம் பார்த்தவை. அதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுவதே முக்கிய தொழிலாகிவிட்டது அக்கிராமத்துக்கு. மழை பெய்யும் காலம் தவிர மீதி காலங்களில் ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் குடிநீர் கிடைக்கும் என்றநிலை. ஆனால் இதெல்லாம் 1975க்கு முன் இருந்த நிலைமை. இன்று சென்னைக்கு வெங்காயத்தையும், வளைகுடா நாடுகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளையும் ஏற்றுமதி செய்யும் கிராமமாகிவிட்டது ராலேகான் சித்தி. இந்த மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வித்திட்டவர் அண்ணா ஹசாரே. அண்ணா சாரே ஒரு முறை தில்லி ரயில் நிலையப் புத்தகக் கடையில் விவேகானந்தரின் நூலொன்றை வாங்கிப் படித்தார். மக்களுக்குச் சேவை செய்வதே பிறப்பின் கடமை என்பது விவேகானந்தரின் போதனையால் அவருக்குப் புரிந்தது.

எட்டாம் வகுப்பைக்கூட எட்டாத அண்ணா ஹசாரே நாட்டுப்புற வளர்ச்சியில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார். அவரை இந்தச் சேவையில் ஈடுபடுத்தியது ஒரு புத்தகம்தான் என்பதை அறியும்போதுதான் புத்தகங்களின் தாக்கம் நமக்குப் புரிகிறது.

நன்றி: தினமணி, தமிழ் நாளிதழ்.

Follow

Get every new post delivered to your Inbox.