புதுமைப்பித்தன் கவிதைகள்-1: " இணையற்ற இந்தியா!"

இந்தியா தேசம் – அது
இணையற்ற தேசம்! – என்று
யாங்களும் அறிவோம் – வெள்ளை
ஆங்கிலர் அறிவார் – பிள்ளைத்
துருக்கனும் அறிவான் – அறிவால்
சூழ்ந்தது தொல்லை.

சிந்தையிலே பின்னிவைத்த சிலந்திவலைச் செல்வி
செல்வழியில் கண்ணியிட்டு செயத்தம்பம் நாட்டும்!
“இந்தியர்கள் நாடல்லோ இமையவர்கள் நாடு!
கந்தமலர் பூச்செரிவில் கடவுளர்களோடு
கன்னியர்கள் கந்தருவர் களித்துவளர் நாடு”
என்று பல சொல்லியதை சொல்லளவில் நம்பி
எவனுக்கும் மண்டியிடும் ஏந்து புய நாடு!
ஆற்றுக் கரையருகே அணிவயல்கள் உண்டு;
சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது!
வேதம் படித்திடுவோம், வெறுங்கை முழம் போட்டிடுவோம்!
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம்!
அத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதை பேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்.

இந்தியா தேசம் – அது
இணையற்ற தேசம்.

Follow

Get every new post delivered to your Inbox.