Grateful thanks to Jack Canfield, DreamBigC and YouTube.
சேருமிடம்
எதுவானாலும்
மலரின் காத்திருத்தல்
ஓரிரு நாட்களே!
மலரினும் மெல்லிய
மங்கையர்க்கு?
மரணத்தைப் போலவே
மணநாளும் தெரியாமல்
எத்தனை நாள் காத்திருக்க?
வருமா, வராதா?
இத்தனை வயதிற்குள்
காத்திருக்கும் கன்னியர்க்கு
மணம் முடிக்க வேண்டுமென
அவசரச் சட்டம் வராதா?
அரசே நடத்த முடியாதா?
அவசரம் எனக்கில்லை,
இளைய மகள் நான்.
அக்காக்கள் இருவர்
அவர்களுக்கு விடியட்டும்!
மேஜை நிறைய இதழ்கள். நிறைய படிக்கவேண்டியியது பாக்கி இருக்கிறது. ஏகப்பட்ட இடையூறுகள், குறுக்கீடுகள்; அப்புறம் இயலாமை, உடற்சோர்வு, மனச்சோர்வு. எல்லாம் தள்ளிக்கொண்டே போகிறதே, காலம் ஓடிக் கொண்டேயிருக்கிறதே என்ற கவலை. என் செய்வது?
மூன்றாவதாக, பா.செயப்பிரகாசம் அவர்களின், “சட்டாம்பிள்ளைகளும் சமச்சீர் கல்வியும்”. இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நுட்பமான உண்மைகளையும், அவை எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பதுவும் இதைப் படித்த பின்னரே அறிந்தேன். “கல்வி என்பது எழுத்துக்களைக் கற்பது அல்ல. எழுத்துக்களின் வழி பயணம் செய்து அறிவைப் பெறுவது” என்பது அவரது கருத்து. (என்னைப் பொறுத்தவரை முழு மனிதர்களை, பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கவும், மேன்மையான சிந்தனைகளை மனதில் விதைத்து, அதன்படி வாழக் கற்றுக் கொடுப்பதும்தான் உண்மையான கல்வி. வெறும் அறிவைத் தருவது, திறமைகளை வளர்க்க வழிகாட்டுவது மட்டுமல்ல கல்வியின் நோக்கம். இன்றைய சமுதாயத்தில் நாம் நிறைய அறிவாளிகளைத், திறமைசாலிகளைப் பார்க்கிறோம்; ஆனால் அவர்களில் பலரும் சுயநலத்திற்காக தங்கள் அறிவை பயன்படுத்தி, எதுவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்-வாழலாம் என்று இருப்பதால்தான் இன்றைய சமுதாயத்தில் பல சுரண்டல்கள், அநியாயங்கள், அராஜகங்கள், அக்கிரமங்கள் மலிந்திருக்கின்றன. சுவாமி விவேகானந்தர் கூறிய மனிதர்களை உருவாக்கும் கல்வியே (Man-making Education) இன்றையத் தேவை.)
சிந்திக்க வேண்டிய அவரது கேள்விகள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்: “… பொதுக் கல்வியை அரசே வழங்க வேண்டுமென்ற அரசியல் யாப்பின் கோட்பாட்டிற்கு எதிராக தனியார் கல்வியை எவ்வாறு அனுமதித்தார்கள்? அரசியல் அமைப்புச்சட்ட அத்துமீறலைச் செய்ததோடு அல்லாமல், கல்வி வழங்கலில் நீங்களும் அரசியல் சட்டத்தைக் காலில் போட்டு மிதியுங்கள் என்று தனியார்களையும் தூண்டி அவமதிக்கச் செய்தது சரியா?… அறுபது ஆண்டுகள் கழித்து சமச்சீர் கல்வி என்று நாம் பேசுவதும், போராடுவதும், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என்று இழுத்துக்கொண்டு போவதும், அரசியல் சட்டத்தைக் கேலி செய்வதாக இல்லையா….”
அடுத்து, ரவிக்குமாரின் சிறுகதை, “கடல்கிணறு”. இக்கதையில் சில பகுதிகளை நான் மிகவும் ரசித்தேன். அவற்றில் சில: “…நிலாவை மேகம் தின்றுகொண்டிருந்தது…. யாரோ காற்றைச் சுருட்டி எடுத்துச் சென்றுவிட்டதுபோல் இறுக்கம்…. நான் எப்போதும் தனிமையோடே சிநேகமாக இருந்தேன்… வீட்டிலிருந்து கிளம்பும்போது தனிமையும் என்னோடு பள்ளிக்குக் கிளம்பிவிடும். … கடலைப் பார்ப்பது சுவாரஸ்யமான விஷயம்தான். கடல் என் அம்மாவைப் போல எனக்குத் தோன்றும். அதில் இருக்கும் மீன்களை என்னைப்போல் உருவகித்துக் கொள்வேன். அவை அம்மாவை விட்டுப் பிரிவதில்லை. பிரிந்தால் அவற்றுக்கு மரணம் நிச்சயம். நிலத்தோடு ஓயாமல் உரையாடிக் கொண்டிருக்கும் கடலுக்கு சலிப்பே ஏற்படாதா? பின்வாங்கிப் போவதும், திரும்ப வந்து பேசுவதுமான இந்தப் பழக்கத்தை மனிதர்களிடமிருந்து கடல் கற்றுக்கொண்டதா அல்லது கடலிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொண்டார்களா? நிலத்துக்குக் கடல் தரும் அன்பளிப்புதான் மீன்களா?….”
அடுத்து, வாசந்தியின் தொடர் கட்டுரையான ‘பெற்றதும் இழந்ததும்’. இதில் உலக வங்கியின் தலைவராக இருந்து, பெண் சபலத்தால் அவமானப்பட்டு, பதவி இழந்து, பிரஞ்சு நாட்டின் அதிபராகும் வாய்ப்பை இழந்து நிற்கும் கோடீஸ்வரரான டாமினிக் ஸ்ட்ராஸ் கான் பற்றியும், பெண்களை வெறும் போகப் பொருளாகவும், அவர்கள் தங்களை விட எல்லாவிதத்திலும் தாழ்ந்தவர்கள் என்றும், அவர்களைச் சமமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆணாதிக்க மனப்பான்மையையும் சாடியிருப்பது ஆணினம் சிந்திக்க வேண்டிய ஒன்று.
இறுதியாக, தமிழச்சி தங்கப்பாண்டியனின் கவிதை. நல்ல கவிதை. ஒவ்வொரு வரியும் என் தந்தையாரை நினைக்க வைத்தது. பொதுவாக, எனக்குக் கவிதையில் ஈடுபாடு குறைவு; தெளிவாக, எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் இல்லையென்றால் பெரும்பாலும் நான் விட்டுவிடுவேன். இழப்பு எனதுதான் என்பது எனக்குப் புரிகிறது. இருப்பினும் என் செய்வது?
மொத்தத்தில் இந்த இதழ் எனக்கு நிறைவைத் தந்தது.
நன்றி: குமுதம் தீராநதி
பரிவோடு ஒரு விழியால்
பார்த்திடவே வேலவனும்
ஏன் மறந்திட்டான்?
கண்ணாத்தாள்
ஏன் கைவிட்டாள்?
மீன் கண்ணாள்
ஏன் மறந்திட்டாள்?
ஆயிரம்
கண்ணுடையாள்
அலட்சியமாய்
விட்டதென்னே?
விரல்களை
விழிகளாக்கி
காதுகளால்
கற்கும் இவர்கள்
மூன்று கால்களால்
நடந்தாலும்
சொந்தக்காலில்
நிற்ப்பவர்கள்.
இருட்டு ஒரு
பொருட்டில்லை
இறைவன் மீதும்
வெறுப்பில்லை
எண்ணும் எழுத்தும்
கண் எனத் தெளிந்ததால்
கல்வி எனும் வெளிச்சம்
கைகொடுக்கும் இறுதிவரை.
வெறும் ஆறு புள்ளிகளால்
எதனையும் படிக்கலாம்
கெல்லரும்,பிரைலரும்
வெற்றி பெற வில்லையா?
அன்பின் மிகுதியினால்
வீட்டினுள் சிறை வைத்து
எதிர் காலத்தை
இருட்டாக்காமல்
பர்வையற்ற சிறார்களை
சிறப்புப் பள்ளியில் சேர்த்து
கல்விக்கண் கொடுப்போம்
கண்மணிகள் வாழட்டும்!
முதலில், ப.திருமாவேலனின், “ரியல் ஹீரோஸ்”.
வட சென்னையைப் பற்றிய தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன. இதெற்கெல்லாம் விடிவு காலம் எப்போது என்ற கேள்விதான் என் மனதில் நிற்கிறது. காலம்தான் பதில் சொல்லவேண்டும். அதிலிருந்து:
“நாஞ்சில் சம்பத், நாஞ்சில் நாடன் – நாகர்கோவிலைச் சேர்ந்த பல வி.ஐ.பிக்களின் பெயரோடு ஒட்டியே இருக்கும் ‘நாஞ்சில்’ பட்டம். நாஞ்சில் என்றால் ‘கலப்பை’ என்று அர்த்தம். தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு குமரி மாவட்டம் இருந்த காலகட்டத்தில் இங்கிருந்துதான் சமஸ்தானம் முழுவதற்கும் நெல் சென்றது. அந்த அளவுக்கு நெல் சாகுபடியில் கொடிகட்டிப் பறந்த பகுதி இது. ஆனால், இன்று விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டதால், அரிசி உற்பத்தியில் உள்ளூர் தேவைக்கே தடுமாறுகிறது நாஞ்சில் நாடு!”