சூரியின் டைரி-61: நோகவைத்தவை – காவிரிப் பிரச்னை

சூரியின் டைரி-61:  நோகவைத்தவை – காவிரிப் பிரச்னை
குமுதம் தீராநதி 2013 ஜனவரி இதழில் வெளியான செ.சண்முகசுந்தரம் எழுதிய வறண்ட காவிரியில் தொலைந்த மனிதம் என்ற மிகச் சிறப்பான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:
———-
காவிரி டெல்டா மாவட்டங்களில் அடிப்படை வாழ்வாதாரம் சீர்குலைவுக்கு ஆளாகத் தொடங்கி பல்லாண்டுகளாகி விட்டன.  தொடர்ச்சியான நதிநீர்ப் பிரச்னை.  தமிழ் நாட்டை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளின் உதாசீனம், பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் வைத்திருக்கும் போக்கு, விளை நிலங்களை விரைவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்.  வேறு வேலை வாய்ப்புகளைத் தேடி இடம் பெயரும் டெல்டா விவசாயத் தொழிலாளர்கள், விளை நிலங்களை மனைகளாக வாங்கிப் போட்டு விட்டு சாப்பாட்டுக்கு மைசூர் பொன்னியை எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகளை புழுப்பூச்சிகளைப் போல் பார்க்கும் அரசு, வங்கி அதிகாரிகள், பிரச்னை வந்தால் மட்டுமே அது பற்றி சிந்தனை கொள்ளும் தமிழக, கர்நாடக ஆளும் வர்க்கங்கள், இரு மாநிலங்களிலும் மக்களை உசுப்பிவிடும் சுய நலக் கட்சிகள், மௌனமாகிப் போன மனசாட்சி கொண்ட இரு மாநில மக்கள், வேடிக்கை பார்க்க்கும் மத்திய அரசு, தனது அதிகாரம் வெற்று வேட்டாகிப் போவதை இயலாமையுடன் நோக்கும் உச்ச  நீதி மன்றம், களவாடப்படும் குளங்கள், ஏரிகள்.  யாரிடம் போய் முறையிடுவது?
….
பாமணி ஆற்றில் தண்ணீர் வந்து, தம்மங்குறிச்சி வாய்க்காலில் மோட்டார் போட்டு இறைத்துவிட்டு, அதன் நான்கு கிலோமீட்டர் தொலைவுள்ள மருதங்காவெளியின் வானம் பார்த்த பூமிக்கு கொண்டு வந்து, இரவில் வாய்க்கால் வரப்பில் படுத்து, பாம்புகளுடன் பழகி, சொற்பத்தண்ணீரையும் வயலுக்குப் பாய்ச்சிய அனுபவங்கள் என்  நினைவில் நிழலாடுகின்றன. சமீபத்தில் அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, அவ்விளை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மனகளாயிருந்தன. வாய்க்கால் தூர் வார வராத அதிகாரி அவ்விளை நிலங்களை அளந்து மனைக் கற்கள் போட ஓடோடி வருகிறார்.  என்ன தேசம் இது?
நன்றி: திரு செ.சண்முகசுந்தரம் மற்றும் குமுதம் தீராநதி 

சூரியின் டைரி-59: நோக வைத்தவை

சூரியின் டைரி-59:   நோக வைத்தவை
ஆனந்த விகடன் டிசம்பர் இருபத்தாறாம் நாள் இதழின் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி:
வெளி நாட்டு வியாபாரி… உள் நாட்டு துரோகம்!
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அங்குள்ள வியாபார நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காகவும் லாபி செய்வதற்கென்றே அங்கு லாபியிஸ்ட்கள் இருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபிரம்மாண்டமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்ல… கம்ப்யூட்டர் நிறுவனங்களும், பிரபல மருத்துக் கம்பெனிகளும்கூட இந்தியச் சந்தையை ஆக்கிரமிப்பதற்காக, பணத்தை இறைத்து லாபி செய்திருக்கும் செய்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்தே ஆதாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.
இதில், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைக் குளிரிவிப்பதற்கான செலவும் அடங்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி.
….
ஆண்டாண்டு காலமாக அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்துவிட்டு, சுய உழைப்பாலும், மூலதனத்தாலும் பல இந்தியக் குடிமக்கள் சொந்தமாக வியாபாரம் பார்க்கத் தலைப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் மறுபடியும் அவர்களை எல்லாம் அடிமைகள் ஆக்குவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மத்திய் அரசு செய்கிறது என்பதுதான் வலிமிக்க நிஜம்.
அமெரிக்க லாபி செலவில், இந்தியாவுக்குள் அளிக்கப்பட்ட லஞ்சமும் உண்டா?  இதற்கு, வழக்கமான வழுக்கல் பதிலைத் தந்துள்ளது காங்கிரஸ்.  அப்படி எல்லாம் இருக்காதாம்.  ஒருவேளை இருந்து விட்டால், சட்டம் தன் கடமையைச் செய்யுமாம்!  நாட்டை ஏலம் விடும் மொத்த வியாபரிகள் சிக்கல் வ்ந்தால் சொல்லும் கெட்ட வார்த்தை அல்லவா இது!
….
நன்றி:  ஆனந்தவிகடன்