திருப்பள்ளியெழுச்சி-10:

புவனியிற் போய்ப் பிறவாமையின் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்றவாறென்று நோக்கித்
திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
பாடவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி நிறைவு பெற்றது.

திருப்பள்ளியெழுச்சி-9:

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே உன்தொழுப்படி யோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும்படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி-8:

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறை உரை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி-7:

அதுபழச் சுவையென அமுதென அறிதிற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திரு உத்தரகோச
மங்கையுள்ளாய் திருப்பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி-6:

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தாரவர் பலரும்
மைப்புறு கன்னியர் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி-5:

பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்தே
தங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி-4:

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி-3:

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்போடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாழினை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி -2:

அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சி-1:

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் றிருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே.