சூரியின் டைரி-6: "ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை?"

அண்மையில் என் தந்தையாரின் வருட திதிக்காக என் தம்பி திருச்சியிலிருந்து வேஷ்டி, துண்டு வாங்கி வந்தான். அந்த நேஷனல் வேஷ்டியின் அழகான பேக்கிங்கை பிரித்தபோது, வேஷ்டியைச் சுற்றியிருந்த அழகான வண்ண அட்டையின் உட்புறத்தில் பயனுள்ள செய்தியைக் கண்டேன். தெளிவாக, வண்ணத்தில் அச்செய்தி அச்சிடப்பட்டிருந்தது: ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை?”

எனக்கு எப்போதுமே இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்வதில் நாட்டமுண்டு. சொல்லப்போனால் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்ற தலைப்பில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் ஒரு ஒருநாள் கருத்தரங்கே நடத்தினோம். அதில் இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, இயற்கைக் கல்வி போன்ற பல தலைப்புகளில் திரு கோ.நம்மாழ்வார் போன்ற பல விற்பன்னர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு நல்ல வரவேற்பை நல்கினர். அனைவருக்கும் இலவசமாக இயற்கை உணவு வழங்கப்பட்டது. எனவே நேஷனல் வேஷ்டிகள் நிறுவனத்தின் இந்த சேவை மனப்பான்மையோடு வெளியிடப்பட்டிருந்த குறிப்பை நான் பெரிதும் ரசித்தேன். அக்குறிப்புகளை இங்கே உங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை?

* இரசாயன உறங்களாலும், பூச்சிக்கொல்லி நஞ்சுகளாலும் விளைநிலங்கள் வளம் இழந்தன.

* உழவர்கள் கடனாளிகலாக்கப்பட்டு, தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

* குடிக்கும் நீரும், தைப்பாளும்கூட நஞ்சானது.

* உண்ணும் உணவு நஞ்சானது. உண்பவர்கள் நோயாளியாக ஆனார்கள். உண்ணும் உணவு நன்ஜானதால் இருதய நோய், புற்று நோய், சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் பெருகிவிட்டன.

* இரசாயன வேளாண்மையால் புவி வெப்பம் (Global Warming) உயர்ந்து சுனாமி, பூகம்பம், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்துவிட்டன.

* ஆண்மை, பெண்மைக் குறைபாடுகள், மலட்டுத்தன்மை பெரிதும் அதிகரித்துள்ளது.

* உணவிற்காக ஒரு குடும்பம் செலவிடும் தொகையைவிட மருத்துவத்திர்காகச் செலவிடும் தொகை அதிகரித்துள்ளது.

மாறாக

* இயற்கை சார்ந்த வேளாண்மையால் நிலவளம் உயர்கிறது.

* நஞ்சில்லா உணவு கிடைப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

* வருங்கால சமுதாயத்திற்கு நலவாழ்வு உறுதி செய்யப்படுகிறது.

* சுற்றுச்சூழல் பேனப்படுதலும், பல் உயிர் பெருக்கமும் (Biodiversity) நிலைத்த வாழ்விற்கு அடிப்படைகள்.

* இயற்கை வேளாண்மை பூமியை குளிர்விக்கிறது. பருவகால முரண்பாடுகள் சமன்படுகின்றன.

* இயற்கை வேளாண்மை முறையில் விளைந்த உணவு (Food obtained from Organic Farming) நஞ்சில்லா உணவு, இயற்கை உணவு, சத்தான, சுவையான, பாதுகாப்பான உணவு.

கோ.நம்மாழ்வார்

இயற்கைக்குத் திரும்புங்கள், அல்லது திருப்பப் படுவீர்கள்.

மாசானபு புகோகா

நன்றி: நேஷனல் காட்டன் வேஷ்டிகள் & சர்டிங்ஸ்,
திரு கோ.நம்மாழ்வார் மற்றும் திரு.சானபு புகோகா.

இயற்கை உழவாண்மை-1:

இயற்கை வழி வேளாண்மை மண்ணில் வாழும் பல நுண்ணுயிர்களை வளர்க்கிறது. பயிர்களுக்குத் தேவையான தனிமங்களை இந்த நுண்ணுயிர்கள் வழங்குகின்றன. மண்ணின் பௌதிகத் தன்மையையும் உயர்த்துகின்றன. மண்ணில் புரைகளைக் கூட்டுகின்றன. காற்றோட்டம் கூடுகிறது. ஈரப்பிடிப்பு உயர்கிறது. வடிகால் வசதி கூடுகிறது. மண் அரிப்பு தடுக்கப் படுகிறது. இதன் மூலம் தொடர்ந்து விளைச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இடுபொருள் செலவு குறைகிறது. இதன் மூலம் பண்ணை வருவாய் உயர்கிறது.

கலப்புப் பயிர் சாகுபடி பண்ணையின் மொத்த விளைச்சலைப் பெருமளவு உயர்த்துகிறது. இந்தப் பயிர்கள் நிறையக் கரியை உள்வாங்குவதால், பூமி வெப்பக்கூடமாவது குறைகிறது. கழிவுகளின் சுழற்சி, நிலவளம் பராமரிக்கப்பட உதவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இறக்குமதி செய்யப்படும் பருப்பும் எண்ணெய் வித்தும் இங்கேயே உற்பத்தியாக உதவும்.

நமது நாட்டில் தண்ணீர் மற்றும் சக்தி பற்றாக்குறை கூடிய வண்ணம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு அடி ஆழம் மண் இருந்து, அதில் ஒரு சதவிகிதம் மக்கு உயரும்போது, 74,250 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

டாக்டர் கோ.நம்மாழ்வார் எழுதிய “உழவுக்கும் உண்டு வரலாறு” என்ற நூலிலிருந்து. (விகடன் பிரசுரம், சென்னை, பக்கம் 128, விலை: ரூபாய் 45/- )

நன்றி: டாக்டர் கோ.நம்மாழ்வார் & விகடன் பிரசுரம்.