எனது உறவினர் ஒருவரின் தந்தை இரவில் உடல் நலம் திடீரென மோசமாக, அவசர அவசரமாக, வாடகைக்கார் பிடித்து, மதுரை சென்று, அங்கே புகழ் பெற்ற தனியார் மருத்துவ மனையில் பெரும் பணம் செலவு செய்து, அவரைக் காப்பாற்றி வீடு கொண்டு சேர்த்தார். ஆனால், இரண்டு மாதம் கழித்து, நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர் அலுத்துக் கொண்டார்: “நான் தப்புப் பண்ணீட்டேன்! அன்றைக்கே அவரைச் சாக விட்டிருக்கவேண்டும். தற்போது படுத்த படுக்கையாய் இருக்கிறார். சொல்வதைக் கேட்பதில்லை. கண்டதையும் தின்றுவிட்டு, படுக்கையை நாறவைக்கிறார். பிள்ளைகள் எல்லாம் அருவருப்புப் படுகிறார்கள். அவருக்குப் பாடு பார்பதற்குள் உயிரே போய்விடுகிறது. அவர் சீக்கிரம் போய்ச் சேர்ந்தால் போதும் என்றிருக்கிறேன்.”
நான் என் தினசரிப் பிரார்த்தனையில்: “பிறவிப் பயனை அடைதல் வேண்டும்; முழுமை பெறவேண்டும்; மகத்தான சாதனைகள் படைத்திடல் வேண்டும். உரிய நேரம் வந்ததும், மன நிறைவோடு, சிரித்த முகத்தோடு, உன் திருவடிகளை வந்தடைதல் வேண்டும்.
இப்பிறவியை நல்லபடியாக முடித்திடல் வேண்டும்; அல்லல் படாமல், அவதிப் படாமல், அசிங்கப் படாமல், துன்பப் படாமல், துயரப் படாமல், கேவலப் படாமல் முடித்திடல் வேண்டும். அடுத்த பிறவியிலாவது முற்றிலும் தூயவனாகப் பிறந்து, முற்றிலும் தூயவனாக வாழ்ந்து, முற்றிலும் தூயவனாக முடித்திடல் வேண்டும்.
எஞ்சியுள்ள காலத்திலாவது உடல் உபாதைகள், மன உபாதைகள், நோய்கள், பிணிகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, கடன்கள், கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, மன நிறைவுடனும், மன நிம்மதியுடனும், மன மகிழ்வுடனும், சீரும் சிறப்புடன் வாழ நல்லருள் புரிவாய் இறைவா” என்று வேண்டிக் கொள்வேன்.
ஒரு மாதம் படுக்கையில் கிடந்து, நாய் படாத பாடு பட்டு எழுந்த பிறகு, தற்போது என் பிரார்த்தனை மிகவும் சுருங்கிவிட்டது. சாதனைகள், புடலங்காய்கள், மன நிறைவு, மன மகிழ்வு இவற்றையெல்லாம் கடாசி விட்டு, “இயலாமை, முதுமை, தள்ளாமை, பிணி என்று படுக்கையில் விழுமுன், அடுத்தவர்களுக்கு சுமையாகு முன், இந்த உடலை உதறிவிட்டு, நின் திருவடிகளை நல்லபடியாக வந்தடைதல் வேண்டும்; வேறு ஒன்றுமே எனக்கு வேண்டாம்” என்ற நிலைக்கு வந்துவிட்டேன். நோய்களும், கஷ்டங்களும் மனிதனை எந்த அளவுக்கு பக்குவப் படுத்துகின்றன!
இறைவன் என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறானா என்று பார்க்கலாம்.
நண்பர்கள் யாரும் கண்ணில் படவில்லை. தொடர்பே இல்லாமல் போயிருந்தது.
வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், பிரதான சாலையில், குண்டு காதர் கடையில் அப்பா எங்களுக்கு நொறுக்குத்தீனி வாங்கி வருவார். அந்தக் கடை காணாமல் போயிருந்தது. அதுபோல் காலையில் அருமையான, சுவையான தேநீர் வழங்கும் சைவப் பிள்ளை கடையும் காணாமல் போயிருந்தது.
அடுத்து நண்பர் திரு மு.இராமகிருஷ்ணன் அவர்களைப் பார்த்தேன். எங்கள் அலுவலகத்தில் துணை இயக்குனராகப் பணிபுரிபவர். அவரும் ஆரம்ப காலங்களில் புத்தகத் திருவிழாவை நடத்த நாங்கள் பட்ட சிரமங்களை நினைவு கூர்ந்தார்.
மற்றபடி நிறைய குழந்தைகளுக்கான நூல்கள், தமிழ் சா ஃ ட்வேர், டிவிடிக்கள் கடைகள், வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூல்கள், ஜக்கி வாசுதேவ் அவர்களின் நூல்கள், வீடியோ டிவிடிகள், நிறைய புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல் தொகுப்புகள், தமிழ், ஆங்கில அகராதிகள் விதம் விதமாக என்று அனைவரையும் கவரும் வண்ணம் பல்லாயிரம் நூல்கள்.
வெளியே வரும்போது முகப்பில் பேராசிரியர் முனைவர் அய்க்கண் அவர்களையும் (எங்கள் பகுதியின் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் புத்தகத் திருவிழா அமைப்புக்குழுத் தலைவர்), நண்பர் பி.வி.சுவாமி அவர்களையும் (நாலெஜ் புக் ஹவுஸ் உரிமையாளர் மற்றும் அமைப்புக் குழுத் துணைத் தலைவர்), டாக்டர் ஏ.செல்வராஜ் அவர்களையும் (ஹோமியோபதி மருத்துவர் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் பொறுப்பாளர்) சந்தித்துப் பேசினேன். சுவாமி அவர்கள் தொடக்கவிழாவில் காரைக்குடியில் புத்தகத் திருவிழா அமையக் காரணமாக இருந்த என்னை நினைவு கூர்ந்ததைக் குறிப்பிட்டார். அவர்கள் அனைவரிடம் அவர்களது அன்பிற்கு நன்றி கூறி விடை பெற்றேன். மீண்டும் ஒரு நாள் புத்தகத் திருவிழாவிற்குச் செல்லவேண்டும். பார்க்கலாம்.
நேற்று மாலை ஒரு வழியாக காரைக்குடி புத்தகத் திருவிழா அழைப்பிதழை நண்பர் சுவாமி அவர்களது அலுவலகத்தில் பெற்றேன். ஆனால் அதைப் பதிவு செய்வதற்குள் எனது கணினியில் நீண்ட காலமாக இருந்த பழுதொன்றை நீக்க நண்பரொருவர் வந்துவிட்டார். பழுது நீக்கப்படுவதற்குள் எனது பொறுமை போய்விட்டது. எனவே இன்று தொடக்க விழா முடிந்தபின் இன்று தொடக்க விழா அழைப்பிதழைப் பதிவு செய்கிறேன். வெறும் தகவலாக இருந்து விட்டுப்போகட்டும் என்று. (பதிவு மேலே).
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை தொடக்க விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. கலந்துகொண்ட நண்பர்களிடம் விவரங்கள் கேட்டிருக்கிறேன். வந்தவுடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் எவ்வாறு அமைந்தன என்பதனைப் பதிவு செய்கிறேன்.
மேலே உள்ள விளம்பரத்திற்கு உதவிய ஜனப்பிரியா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பற்றி ஒரு கருத்தையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன். மருந்துகள், காஸ்மெடிக் சரக்குகள், ஹார்லிக்ஸ், போன்வீட்டா போன்ற பெவேரேஜ்கள், தமிழ் மருந்துகள் மற்றும் பலசரக்குச் சாமான்கள் எல்லாம் இங்கே குறைந்த விலையில் கிடைக்கிறது. உதாரணமாக நான் மாதாமாதம் டிப்ரோடீன் (DProtin) என்ற பாலில் இட்டு உண்ணும் புரதச்சத்து பானப்பொடி வாங்குகிறேன். மருந்துக் கடைகளில் வாங்கினால் MRP படி பில் தந்து பணத்தைக் கறந்துவிடுவார்கள். நீங்கள் அவர்களிடம் MRP என்பது அதிக பட்ச விலையே தவிர குறைந்த பட்ச விலையில்லை என்று போராடினால் ஒரு வேளை ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ குறைப்பார்கள். ஜனப்பிரியாவில் எதுவுமே கேட்காமல், ஒரு டிப்ரோடீன் (DProtin) பாட்டிலுக்கு நாற்பது ரூபாய் குறைத்துக் கொடுத்தார்கள்! (MRP ரூபாய் 285 /-; அவர்களது விலை ரூபாய் 245 /-) என்னால் நம்பவே முடியவில்லை. சந்தேகப்பட்டு அவர்களிடம் கேட்டதில் அவர்கள் கடையில் எல்லாமே குறைந்த பட்ச லாபத்திற்கு விற்பதாகக் கூறினார்கள். இது போல பல பொருட்களின் விலையையும் சோதித்துப் பார்த்திருக்கிறேன். அவர்கள் கூறுவது உணமைதான். காசு காசு என்று பேயாய் அலையும் இந்நாளில் நேர்மையாக, customer -freindly ஆக கடை நடத்தும் ஜனப்பிரியா நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த 35 நாட்களில் கிட்டத்தட்ட 100 முறை தொலைபேசியில் பேசியிருப்பேன். இதற்கிடையில் ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது, ஏர்டெல் சேவை திருப்தியாக இருக்கிறதா என்ற வினவலுடன். எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. யார் மேலும் நம்பிக்கையில்லாமல் நொந்து போய் இருக்கிறேன்.
இடை இடையே அதிகப்படி சேனல்கள் வேண்டுமா, வேண்டுமெனில் அதற்கு கட்டணம் எப்படி செலுத்துவது போன்ற குறுஞ்செய்திகள் வந்துகொண்டேயிருக்கிறது; நான் அவற்றை கண்டுகொள்வதே இல்லை. ஏற்கனவே பணம் கட்டிய சேனல்களே வராதபோது மேலும் பணம் செலுத்த நான் என்ன பைத்தியமா? என்ன ஆனாலும் சரி, பல்லைக் கடித்துக்கொண்டு இந்த ஏழு மாத காலம் முடியும் வரை காத்திருந்துவிட்டு, அடுத்து தொடர்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.
இது எனது முதல் பிறவியோ அல்லது கடைசிப் பிறவியோ அல்ல என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதுபோல் என் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளுக்கு நானே காரணம்; அறிந்தோ அறியாமலோ நான் செய்த முன்வினைகள் – இபபிறவியிலோ அல்லது முந்திய பிறவிகளிலோ செய்த முன்வினைகளே காரணம். ஆகவே நான் கடவுளையோ அல்லது வேறு யாரையோ குறைசொல்வதில் அர்த்தமில்லை. சுவாமி விவேகானந்தர் கூறியதன் பொருள் தற்போது நன்றாகப் புரிகிறது: You are the maker of your own destiny.
அதிருஷ்டம், துரதிருஷ்டம், அல்லது விதி என்பதெல்லாம் முன்வினைப்பயனே. விதி, விதி என்று வீணாகிப் போய்விட்டோம் என்பர் சிலர். இந்தக் கண்ணோட்டம் Fatalistic என்று சிலர் சொல்லலாம். ஆனால் இதில் ஒரு Positive Side இருக்கிறது. நல்வினைகளால் நற்பயன்களும் (அதிருஷ்டங்களும்), தீவினைகளால் தீய பயன்களும் (துரதிருஷ்டங்களும்) நேருமென்றால், நாம் ஏன் தீயவற்றைச் செய்யவேண்டும். நாம் நல்லதை மட்டுமே ஏன் செய்யக்கூடாது? தற்போது நாம் நல்லதையே செய்தால் பின்னர் நமக்கு விளைவதெல்லாம் நல்லதாகவே இருக்குமல்லவா? நல்லதையே செய்ய இது ஒரு INCENTIVE என்று நாம் ஏன் கொள்ளக்கூடாது? இதுதான் என்னுடைய கருத்து. ஆனால் அதிருஷ்டத்திற்காக பச்சைக்கல் மோதிரம் அணிதல், பெயரை மாற்றிக் கொள்ளுதல், பெயரில் சில எழுத்துக்களை சேர்த்துக் கொள்ளுதல் அல்லது வேறு எதையாவது செய்யவேண்டும் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. இதில் மாற்றுக் கருத்து இருந்தால் முன்வைக்கலாம்; கேட்க நான் தயாராக இருக்கிறேன்.
மனிதர்களுடைய குறைபாடுகள் (Imperfections) அவர்களது மொழிகளையும் பற்றிக்கொள்வதில் வியப்பொன்றுமில்லை. மொழி மட்டுமல்ல, வேறு எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் முழுமை (Perfection) என்பது ஒரு இலக்கு அல்லது வெறும் கனவு என்றுதான் நினைக்கிறேன். அதனால்தான் என்னவோ எனது இடதுசாரி நண்பர்கள் “NOTHING ABSOLUTE ” என்கிறார்கள் போலும்.
இன்று 2010-ம் வருடம் அக்டோபர் மாதம் ஐந்தாம் நாள். இன்று பிரதோஷம். ஊரிலிருந்தால் நகர சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டிருப்பேன். இங்கு சென்னையில் நான் இருக்கும் இடத்திலிருந்து சிவன் கோவில் தேடி அலைய முடியாது. மேலும் நாளை ஊர் கிளம்பியாக வேண்டும். வேலைகள் நிறைய முடித்தாக வேண்டும்.
தம்பி நெல்லையப்பனுடன் ஒருமுறை வடலூர் சென்றிருந்தேன். அங்கு தொடர்ந்து ஒலித்த மேலே உள்ள மந்திரம் என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. அங்கே ஒருவர் திருவருட்பாக்களை நெக்குருகப் பாடினார். காதில் தேன் பாய்ந்தது. அங்கே குறிப்பிட்ட பகுதி தாண்டி செல்ல புலால் உண்ணாதவர்க்கே அனுமதி என்றார்கள். அன்றே நினைத்தேன் புலால் உண்பதை நிறுத்தவேண்டுமென்று. ஆனால் முடியவில்லை.
சில மாதங்களுக்கு முன் திருப்போரூர் சென்றிருந்தபோது, வள்ளலார் அடிபற்றி வாழும் மகான் ஒருவரை அங்கு கண்டேன். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே புலால் உண்பீர்களா என்பதுதான். அந்த நிமிடமே இனி புலால் உண்பதில்லை என்று முடிவெடுத்தேன். இறையருளால் இன்றுவரை உறுதியாக இருக்கிறேன்; இனியும் இருப்பேன் என்று நம்புகிறேன்.
வடலூர் பற்றியும், வள்ளலார் பற்றியும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை என் அரைகுறை நினைவிலிருந்து இங்கே பதிவு செய்கின்றேன்.
வடலூரில் தைப்பூச ஜோதி கண்டேன் – அங்கே
வள்ளலார் ஏற்றிவைத்த நீதி கண்டேன்.
வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளல் கண்டேன்
தேடிய கருணை கண்டேன்
தெய்வத்தின் காட்சி கண்டேன்
பாடிடும் அருட்பாவில் நெஞ்சமே உருகக் கண்டேன்
நாடிடும் அன்பர்க்கெல்லாம் நலமே பெருகக் கண்டேன்
ஏழுகால பூஜையிலே என்னையே நான் மறந்தேன்
ஏழுதிரை விலகிடவே இன்பமே நானறிந்தேன்.
சூழ வந்த வினைகளெல்லாம் ஓடுகின்ற மாயம் கண்டேன்
சுடர் விடும் மெய்ப்பொருளாய் ஜோதிஎனும் தீபம் கண்டேன்.
குறைந்த பட்சம் இன்று முழுக்க யார் மீதும் கோபம் கொள்ளக்கூடாது, காழ்ப்புணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது, யாரையும் வெறுக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் காலையில் செய்தித்தாளை எடுத்ததும் அதற்குச் சோதனை வந்தது. அரசியல்வாதியின் மகன் ஒருவன் அரசுப் பேருந்து ஊழியர் ஒருவரை அடித்ததாகவும், அதையடுத்து பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ததாகவும் அதனால் மக்கள் அவதிக்குள்ளானதகவும் செய்தி. வள்ளலாரை நினைந்து ஒருவாறு மனச் சமாதானம் செய்துகொண்டு, ஆத்திரத்தை கைவிட்டேன். இன்று முழுவதும் இயன்றவரை அந்த மகானை, கருணையின் திருஉருவை, நினைவில் கொண்டு செயல்படுவேன்.
சென்னையில் வினயாகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் சாலையோரம் ஐந்தடி, பத்தடி உயர வண்ண வினயாகர் சிலைகள் அலங்கரித்தன. மகாராட்டிரத்தைப்போல் தமிழ்நாட்டிலும் விநாயகர் வழிபாடும், குறிப்பாக வினயாகர் சதுர்த்திக் கொண்டாட்டமும் சிறப்பாகிக் கொண்டே போகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.