என்ன நடக்கிறது?-15: நாமெல்லாம் மருத்துவ ஆராய்ச்சிக்கான எலிகள் !

நேற்று 29 .6 .2011 ஆனந்த விகடனில் படித்த செய்தி என்னைப்  பெரிதும் அதிரவைத்தது, நடுங்க வைத்தது.  “யாருடைய எலிகள் நாம்?” என்ற சமஸின் கட்டுரை அது.
புதிதாக உருவாக்கப்படும் மருந்துகள் மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை விளைவிக்கிறது என்று சோதிக்கப்பட்ட பின்னரே சந்தைக்கு வருகின்றன.  மேலை நாடுகளில் இத்தகைய சோதனைகளுக்கான விதிமுறைகள் மிகக் மடுமையானவை.  ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்ற ஆணையின் பேரில் நூறு கோடி, இருநூறு கோடி என்று நஷ்ட ஈடு கொடுக்கும் நிலை அங்கே உண்டு.  ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சட்டங்கள் எளிதாக வளையக்கூடியது; மக்களை எளிதாக ஏமாற்றலாம்; அதை அரசோ, அரசு அமைப்புகளோ கண்டுகொள்ளாமல் இருந்துவிடும்; எல்லாவற்றையும் எளிதாக மூடி மறைத்துவிடலாம்.  எனவே பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இதுபோன்ற சோதனைகளை இந்தியாவில் நடத்துகின்றன.  எல்லாவற்றையும் மீறி, சமயங்களில் இச்சோதனைகளின் கடுமையான பின்விளைவுகள் பற்றி அதிர்ச்சியும், வேதனையும் தரும் உணமைத்தகவல்கள் கசிகின்றன.  நம்மிடையேயும் மனசாட்சி உள்ள சிலர் இருக்கிறார்கள் என்று உணர முடிகிறது.  
உதாரணத்திற்கு ஒன்று.  ஆந்திர மாநிலத்தில்   கருப்பைப் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனைகளில் 14,000 பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமிகள் ஈடுபடுத்தப் பட்டனர்.  அச்சிறுமிகளுக்கோ அல்லது அவர்களது பெற்றோர்களுக்கோ இப்படி ஒரு ஆய்வு நடப்பதே  தெரியாது.  இந்தச் சிறுமிகளில் சிலர் இறந்ததைத் தொடர்ந்தே உண்மை வெளிவந்தது.
இதுபோல தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் நடந்த ஆய்வு ஒன்றில்  49 ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறந்தன.
உண்மை வெளிவந்தாலும்கூட, பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் ஏமாற்றிவிடுகிறார்கள்.  உதாரணமாக, சென்ற ஆண்டு ஆய்வில் இறந்த 670 பேரில் 8 பேருக்கு மட்டுமே நஷ்ட  ஈடு வழங்கப்பட்டுள்ளது.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?  

நம்மைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் எளிதாக விலைபோய் விட்டார்களா?  

இது போன்ற விஷப்பரிட்சைகளை அப்பாவி நோயாளிகள் மேல், அவர்களது அனுமதியின்றி நடத்த  யார் அனுமதி வழங்கியது?  

இது போன்ற கொடுமைகள் எப்படி எளிதாக மறைக்கப்பட்டுவிடுகின்றன!  

அரசோ, அரசு அமைப்புகளோ, மீடியாக்களோ இதையெல்லாம் எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கின்றன?

நாட்டின் முக்கிய பொறுப்புகள் எவ்வளவு கேவலமான, காசாசை பிடித்த, கல்மனம் கொண்ட கயவர்கள், சுயநலமிகளின்  கையில் சிக்கியுள்ளதை நினைக்கும்போது மிகவும் அச்சமாக இருக்கிறது.  எனது வேதனையையும், அச்சத்தையும் என் வலைப்பூவில் பதிவு செய்துவைக்கிறேன்.  அதனால் பெரிதாக எதுவும் நடக்கப் போவதில்லை, யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை என்று அறிந்தாலும் இதைச் செய்துவைக்கிறேன். 

நன்றி:  “சமஸ்”  மற்றும்   ஆனந்த  விகடன்.    

என்ன நடக்கிறது?-14: வீணாகும் தானியங்கள்: வெறும் சோற்றுக்கா வந்ததிந்தப் பஞ்சம்? – அ.முத்துக்கிருஷ்ணன் ("உயிர்மை" அக்டோபர் 2010 இதழில் வெளியான கட்டுரை)

வீணாகும் தானியங்கள்:  வெறும் சோற்றுக்கா  வந்ததிந்தப்  பஞ்சம்?  என்ற தலைப்பில்  திரு   அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரையை  “உயிர்மை”  அக்டோபர் 2010   இதழில்  படித்தபோது  மிகவும்  வேதனையாக  இருந்தது.  விழிப்புணர்வைத் தூண்டும்  இந்த  அருமையான  கட்டுரையை அனைவரும் படிக்கவேண்டும்,  அனைவரிடத்திலும்  இது போன்ற  கொடுமைகளுக்கெதிரான  ஒரு எழுச்சி  ஏற்படவேண்டும்  என்ற  எண்ணத்தில்  திரு முத்துக்கிருஷ்ணன்  அவர்கள் அனுமதியுடன்  முழுக் கட்டுரையையும்  கீழே  பதிவு செய்கிறேன்.  அனைவரும் படிக்கவேண்டும், இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக  ஒன்று திரள வேண்டும்.  மற்றவர்களும் இதைப் படிக்க உதவவேண்டும் என்று  அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன்.

எனது மடலுக்கு  உடனே பதில் அனுப்பியதற்கும், கட்டுரையைப் பிரசுரிக்க அனுமதித்ததற்கும்   திரு முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கும்,  கட்டுரையை வெளியிட்ட  உயிர்மை மாத இதழுக்கும்  மனமார்ந்த நன்றிகள்.   

இனி  கட்டுரை: 

வீணாகும் தானியங்கள் : 
வெறும்  சோற்றிற்கா   வந்ததிந்தப்   பஞ்சம்?
 –  அ.முத்துக்கிருஷ்ணன்

 (“உயிர்மை”,  அக்டோபர் 2010)

மதுரை நகரத்து தெருக்களில் தினந்தோறும் நான் சந்திக்கும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களாக ஏறுமுகத்தில் உள்ளது. தெருக்களில் பிச்சை எடுத்து அலையும் பசியின் ரேகைகள் படிந்த முகங்கள் காணும் இடமெல்லாம் விரவியுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பலகாரக்கடைகள், உணவு விடுதிகள், ஜவுளிக்கடை வாயில்கள் என எங்கும் அவர்களின் அழுகையும் முனகலும் அவலமாய் ஒலிக்கிறது. அவர்கள் ஏன் இத்தனை ஆயிரம் மைல் தொலைவு பயணித்து இங்கு வந்து பிச்சை எடுக்க வேண்டும் என்கிற கேள்வி என் மனதில் பல காலமாக இருந்தது.பல சமயங்களில் அவர்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கிறேன். சில சமயம் அது நிகழ்ந்தும் உள்ளது. இவர்கள் பெரும்பான்மையாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், குஜராத், சத்திஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம் என மத்திய இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களாகவே உள்ளார்கள். மழை பொய்த்தது, விவசாயக் கூலி வேலை இன்மை, தொழில்- வேலை வாய்ப்பு இல்லை, விவசாயக் கடன், வறுமை என இதை ஒத்த காரணங்களாகவே அனைவரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும், Òஎங்கள் வீட்டு குதிர்களில் எந்தத் தானியமும் இல்லை. ஆகையால் அதனை- தானியத்தை- தேடி வந்தோம்” என்றார் கச்சிதமான வார்த்தைகளில். இதன் பின்னர் நான் விவசாயத் தற்கொலை, வறுமை, பசி, இடப்பெயர்வு என எத்தனையோ பிரதிகளை வாசித்தபோதும், அவை அனைத்தும் எனக்கு சுருக்கமாக இந்த வார்த்தைகளில் கூறிய பெரியவரின் பார்வைக்கு மறுவாசிப்பு செய்வது போலவே உள்ளது. இவர்களில் பெரும்பகுதியானவர்கள் விவசாயக் கூலிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உயிர் பிழைத்து எப்படியேனும் வாழ்ந்திட முற்படும் இவர்களை வாழ்க்கை தொலை தூரங்கள் வரை அலைக்கழிக்கிறது. ஒருவேளை இவர்கள் தங்களின் ஊர்களிலேயே இருந்திட நேர்ந்தால், அது இன்னும் ஒரு தற்கொலையாக அரசு ஆவணங்களில் பதிவு பெற்று இருக்கக்கூடும். பசி மனிதனை எத்தனை கொடூரமாக வதைக்கிறது என்பதற்கு இந்த நூற்றாண்டின் ரத்த சாட்சியாக விளங்குபவர்கள் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள். ஆனால் அவர்கள் அனைவரின் பிரதிநிதியாக நம் மனதில் பெரும்வலியுடன் ஒரு குறியீடாக முதலில் தங்கியவர்கள் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதி மக்கள்.

1980களில் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதியைப் பற்றிய சித்திரங்கள் பல இந்தியாவின் மையங்கள் நோக்கி வந்தன. வறுமையின் பல வடிவங்கள் அங்கு எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்பது செய்திகளாக, முகப்பு கட்டுரைகளாக தேசிய நாளிதழ்களில் அச்சேறின. முதன்முதலில் பணிதாவின் கதைதான் பெரும் அதிர்ச்சியை விதைத்தது. அதனை அடுத்து 1984ல் ஒரிசாவின் ஆங்கூல் மாவட்டத்தின் பதிபஹால் கிராமத்தைச் சேர்ந்த சுமித்ரா பஹேரா (35) தனக்குப் பிறந்த குழந்தையை ரூ.10/-க்கு விற்றார். அப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அவள் அதற்குக் கூறிய விளக்கம்: ‘ஊர்வசி (10), பன்பாசி (2) ஆகிய என் இரு குழந்தைகள் பட்டினியில் வாடி சாகக்கிடக்கின்றன, அவர்களுக்கு உணவளிக்கவே என் ஒரு மாதக் குழந்தையை விற்றேன்.’ இந்த வார்த்தைகள் போதுமானவை ஒரு தேசத்தை உலுக்க. ஆனால் இவ்வாறான எந்தக் குரலுக்கும் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த தேசம் செவிமடுக்கவில்லை. அதே 1980ல் ஒரு தேசிய நாளிதழ் ஒரிசாவின் நிலையை இந்த உலகுக்கு உணர்த்த ஒரு பெண்ணை ரூ.2000/-க்கு விலைக்கு வாங்கி, இங்குள்ள நிலையை நாட்டிற்குப் பெரும் பரபரப்பாக உணர்த்தியது. இந்த செய்தி பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தின. 2001ல் இந்தியாவின் 13 மாநிலங்களில் பசி – வறுமையால் மக்கள் செத்து மடிவது பதிவு செய்யப்பட்டது. அந்த சமயம் பி.யு.சி.எல். அமைப்பு அன்று தேசம் வசம் இருந்த உணவு தானிய இருப்புகளையும், அந்த தானியங்களின் அவல நிலையையும் சுட்டிக்காட்டி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பலரின் கவனத்தைப் பெற்றது. அப்பொழுது அரசு கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் மெல்ல அழுகிக் கிடக்க வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவைகளை மனிதன் உட்கொள்ள முடியாமல் போகும் நிலையைத் தடுத்து, பசியால் உயிர்பிரியும் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கலாமே என்றது வழக்கு. நீதிபதிகளும் அன்று இதனை ஒத்த பார்வையுடைய தீர்ப்பைத்தான் வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பின் பிரதிகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அவர்களது அலுவலகங்களுக்கு எதிரில் உள்ள தேனீர்க்கடைகளுக்கு வடை சுருட்ட அனுப்பினார்கள்.

வறுமையும் பசியும் இந்திய விளிம்புநிலை மக்களின் தனிச்சொத்தாக நிரந்தரமாக மாற்றப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்நிலை, அவர்களின் வறுமையைக் கணக்கிடும் சுதந்திரங்கள் என பலவற்றை ஆராய பல கமிட்டிகளை இந்திய அரசு நியமித்தவண்ணம் உள்ளது. முதலில் நியமிக்கப்பட்ட சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி இந்திய ஜனத் தொகையில் 37% பேர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வதாகத் தெரிவித்தது. அடுத்து நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா குழு இந்திய ஜனங்களில் 77% பேர் ஒரு நாளில் ரூ.20க்கும் குறைவாகவே செலவிடும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது. அடுத்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.வார்தா கமிட்டி நூறு ரூபாய்க்குக் குறைவாக நாள் ஒன்றுக்கு சம்பாத்தியம் செய்யும் ஒருவரை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளதாகக் கணக்கிடலாம் என்றது. இவை எல்லாம் வறுமையை அல்லது மக்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ளப் போதுமான குறியீடுகளாக விளங்கும்போதும் இவை எதுவும் ஆட்சியில்-நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளில் விழுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வறுமை, பஞ்சம்கூட ஒருவிதத்தில் பல ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும் அரிய சந்தர்ப்பங்களே. பசியால் வாடுபவனுக்கு உடனடியாக இனி உணவு அளித்தால்தான் அடுத்த அரசு அமைக்கும் கமிட்டிக்கு முன்பாக அவன் ஆஜராகிப் பேச இயலும் என்பது தான் எதார்த்த நிலை. இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடுவது 6 லட்சம் கிராமங்களில் வசிக்கும் மக்கள்தான். இந்த இடத்தில் சிலருக்கு 1947, இந்தியா, காந்தி, நாடு, முதுகெலும்பு போன்ற வார்த்தைகள் மனதில் வரக்கூடும். பசுமைப் புரட்சியை இங்கு செயல்படுத்த காரணமானவர்கள் அன்று சொன்ன முதன்மைக் காரணம், ‘இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பின்தங்கியுள்ளது,  சமூகத்தில் மக்கள்  பலர் பட்டினியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கவே பசுமைப் புரட்சி.’ இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் தில்லி அமைச்சக அலுவலகங்களும், மாநிலங்களில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவருக்கும் இதே உணவு தானியத்தின் உற்பத்தியில் ஈடுபட்டு பட்டினியால் வாடுபவர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. பசுமைப் புரட்சியை முன்னெடுத்தவர்கள் இன்று விநியோகம்சார் கோளாறுகள் குறித்து திருவாய் மலர்வதில்லை. இந்தியாவின் மக்களை அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப ரகம் பிரித்து, விதவிதமான வண்ணங்களில் அட்டை கொடுத்து உணவு தானியங்களை வழங்க வேண்டிய ஏற்பாடுகள் இருக்கிறது. ஆனால் அதன்  பலன் எவ்வாறு உள்ளது.

பொது விநியோக முறை என்று ஒன்று உள்ளது. ஆனால் இந்தியாவில் அது எப்படி செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த தேசத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் மிக முதன் மையானதாக, பலமானதாக, சாமானிய ஜனங்களின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டிய துறை அது. நகரத்தில் வசிக்கும் மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் ரேஷன் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது அதில் பொருட்களை வாங்கும் உரிமையை அவர்கள் வீட்டில் Ôவேலைக்காரிகளின் அட்டையாக’ விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால்  இன்று கோடானுகோடி மக்களின் நிலை அப்படி இல்லை. இன்றும் ரேஷன் கடைகளில் பெரும் வரிசை நின்றபடியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடக்கிறது. எப்பொழுது அரிசி போடுவார்கள், எப்பொழுது மண்ணெண்ணை ஊற்றுவார்கள், ஜீனியை இந்தமாதம் வாங்கிவிட முடியுமா என்பது எல்லாம் இன்று ஆய்வு செய்ய வேண்டிய தலைப்புகளாகவே உள்ளன. ஒரு ரேஷன் கடையின் இந்த விபரங்களை நீங்கள் துல்லியமாக அறிந்தவர் என்றால், அரசு அலுவலகங்களில் அரசாணைகளைப் பற்றி முழு தகவல்கள் வைத்திருப்பவர் போல் உங்களின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் ஏறக்கூடும். இந்தியா முழுமையிலும் ரேஷன் கடைகளில் மக்கள் ஒன்றுபோலத்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு பொருட்களை சிட்டை போட்டு வழங்குபவரின் கருணைக்காக காத்திருக்க வேண்டும். எல்லா கடைகளிலும் ஒருவர் இருப்பார். அவர் அந்தப் பகுதியின் அரசியல் செல்வாக்கு படைத்த ஒரு புள்ளியின் நேசத்திற்குரியவராக இருப்பார். எப்பொழுது சரக்கு வரும், எப்பொழுது அதனைக் கடத்துவது, கள்ளச்சந்தையில் விற்பது, வரும் மக்களுக்குப் பெயரளவில் சில பொருட்களைப் போட்டுவிட்டு மிச்சத்தைப் பதுக்குவது என இது தேசம் முழுமைக்கும் இபிகோ போல ஒன்றாகவே உள்ளது, சமமாகவே உள்ளது. பொருட்கள் வாங்காதவர்களின் அட்டைகளில் அதை வாங்கியது போல் நொடிகளில் இவர்கள் குறிக்கும் பாங்கைப் பார்க்கும்போது சி.ஐ. படித்தவர்களை இவர்களிடம் பயிற்சிக்கு அனுப்பலாம் என்றே தோன்றுகிறது. நம் வீட்டுப் பெண்கள் இரண்டு கிலோ ஜீனியைக் கூட நகரங்களில் பெற்றுவிட முடியும், ஆனால் தொலை தூரங்களில் வசிக்கும் இந்த நாட்டின் முதுகெலும்புகளுக்கு எல்லாம் இன்று இது ஒரு கனவே. மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பாத கனவு, அவமானங்கள் நிறைந்த – வலி நிறைந்த, தழும்பேறிய கனவு. அது கிடக்கட்டும், யாருக்கு இப்பொழுது அது பற்றி எல்லாம் கவலை? இந்த முது கெலும்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்று சுருக்கமாகப் பார்க்கலாம். இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடிப் பேர். உலகில் தினசரி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 14,900 குழந்தைகள் சாகின்றன. அதில் இந்தியாவில் மட்டும் தினசரி 5000 குழந்தைகள் செத்து மடிகின்றன. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளன.

உலகின் மிகப் பின்தங்கிய 26 ஆப்ரிக்க நாடுகளில் பட்டினியில் உழல்பவர்களை விட அதிகமானவர்கள் இந்தியாவில் வறுமையில், பட்டினியில் உதடுகள் காய்ந்து, உதவிக்கரம்  வேண்டிக் காத்திருக்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் ஏறக்குறைய 30 கோடிப் பேரின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த 30 கோடிப் பேரைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது வெற்றுச் சொல். அந்த வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் வெள்ளையனின் பிடியில் இருந்த அடிமை இந்தியாவிலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி அனுபவித்ததே இல்லை. ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த மாநிலத்தின் ஜனத்தொகைக்கு ஏற்ப அங்கு 800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டும், ஆனால் அங்கு இப்பொழுது 300 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்ட 2468 பேரில், ஏறக்குறைய 2000 பேர் அரசு வேலையை உதறிவிட்டு, பெருநகரங்கள் நோக்கிப் பயணப்பட்டனர். ரயில்வேயின் மிகவும் அடிமட்ட, கூலி குறைவான 38000 வேலை இடங்களுக்கு சமீபத்தில் 75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் மத்திய இந்திய நிலப்பரப்பை பற்றிய சித்திரம். . இந்தியாவின் மிக பணக்காரர்கள் 100 பேர் வசம், நம் நாட்டின் மொத்த GDPயின் 25% சொத்துகள் உள்ளது. உலகின் மிகவும் Vulnerable நாடுகளின் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66ஆவது இடத்தில்  உள்ளது. இந்தப் பின்புலத்தில் 2009 குடியரசு தினத்தில் பிரதிபாபாட்டில் தேசிய உணவு உத்தரவாதச் சட்டம் பற்றிப் பேசியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நபர் ஒன்றுக்கு கிலோ ரூ.3க்கு 25ளீரீ உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்பதுதான் அவரது பேச்சின் சாரம். பிரதிபாவின் பேச்சு இந்தியாவின் 47% பேருக்கு வாக்குறுதியை வழங்கியது. ஆனால் விடிவை வழங்கவில்லை. இது போன்ற வாக்குறுதியைக் கேட்டுக் கேட்டு மக்கள் அலுத்துவிட்டனர். விதர்பா பகுதிக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அங்கு பல வாக்குறுதிகளை வழங்கி வந்தார். அதனை நம்பி வங்கிகளுக்குச் சென்ற விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மன்மோகனின் வருகைக்குக் பின் தற்கொலைகள் கூடியதாகப் பல புள்ளிவிபரங்களை எடுத்துரைத்தார் பி.சாயிநாத். இப்படித்தான் உள்ளதுநிலை. அதன் பின் தற்கொலை செய்துகொன்ட பலர் தாங்கள் விட்டுச் சென்ற குறிப்புகளைப் பிர தமருக்குத்தான் எழுதியிருந்தார்கள். கடந்த மே மாதம் மத்தியப் பிரதேசத்தின் கணே நகரத்தில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் டன் கோதுமை திறந்தவெளியில் அழுகிப் போக, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நமக்கு ஒளிபரப்பின. அடுத்த அறுவடை நெருங்குவதால் புதிய தானியங்களை வைக்க இடம் வேண்டும். அதனால் கையிருப்புள்ள தானியங்களைக் கடலில் கொட்டிவிடலாம் என்று ஆலோசிக்கப்பட்ட செய்திகள் வெளியானது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசின் கையிருப்பில் இருக்க வேண்டியது 27 மில்லியன் டன் தானியங்கள். ஆனால் அரசின் கையில் இருந்ததோ 55 மில்லியன் டன். இப்படிப்பட்ட சூழலில்தான் பி.யு.சி.எல். சார்பாக வழக்குபதிவு செய்தார் கொலின் கொன்சால்வேஸ். ஆகஸ்டு 12ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் அரசிற்கு ஆலோசனை அல்ல, மாறாக உத்தரவைப் பிறப்பித்தார்கள். ஒன்று குறைந்த விலையில் பசியால் வாடுபவர்களுக்குத் தானியங்களை வழங்குங்கள் அல்லது இலவசமாக உடனடியாக வழங்குங்கள் என்றது தீர்ப்பு. இருப்பினும் மெல்ல செப்டம்பர் 3ஆம் தேதி, 2.5 மில்லியன் டன் அடுத்த 6 மாதங்களில் விநியோகிக்கப்படும் என்று வேண்டா வெறுப்பாகக் கூறியது மைய அரசு. இது எல்லாம் அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றார் மன்மோகன்.

அமெரிக்கா கொடுக்கும் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் இந்த குமாஸ்தாவுக்கு, இந்திய நீதிமன்றம் எப்பொழுதாவது தப்பிக்கூறும் இந்த வார்த்தைகளைச் சகிக்க முடியவில்லை. அரசு மக்களைப் பட்டினியால் கொல்ல முடிவு செய்தால் பின் யார்தான் அதில் தலையிட முடியும்? பெருநகரங்களில் மால்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏர்போர்ட்கள், மென்பொருள் பூங்காக்கள் கட்டப் போதுமான மானியங்களை வழங்க மத்திய அரசால் முடியும். ஆனால் உணவு தானியங்களைச் சேமிக்க தக்க ஏற்பாடுகளை செய்ய இயலாது. அரசு இனி உணவு தானிய கிட்டங்கிகளைத் தன் செலவில் கட்டக் கூடாது என ஆலோசனை வழங்கிய பன்னாட்டு நிறுவனம்தான் இங்கு பல களங்களை, பெரும் குளிரூட்டிகளை நிறுவி வருகிறது. அவர்களின் இடத்தில்தான் மைய அரசு பெரும் வாடகை கொடுத்து தன் சேமிப்பை வைத்துள்ளது. 5 வருடமாக இருந்த அந்தக் குத்தகையை 10 வருடமாக கடந்த பட்ஜட்டில்தான் பிரணாப் முகர்ஜி மாற்றினார். உணவு உத்தரவாத சட்டம் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் வார்த்தைகள் இவை: சமூகத்தின் பின்தங்கியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஏழைகள் என இவர்கள் பசியால், பட்டினியால் வாடாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசாங்கத்தின் பிரதான கடமை. அது மாநில அரசோ – மத்திய அரசோ, இதனை எந்தக் கொள்கை துணையுடனும் நீங்கள் நிறைவேற்றலாம். அது உங்களின் முடிவே. தானியங்கள் வீணாகக்கூடாது, எலிகளை விட அதனைப் பட்டினியால் சாகக்கிடப்பவர்களுக்கு வழங்குங்கள். இது ஒன்றே இந்த நீதிமன்றத்தின் பேராவல். இந்தக் கணக்கிடப்பட்ட ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க அரசிற்குத் தேவையான மானியம் ஆண்டிற்கு வெறும் ரு.56,000 கோடி மட்டுமே. ஆனால் 2010-11இல் ஒதுக்கப்பட்ட தொகை ரு.28,000 கோடி மட்டுமே. இந்தத் தொகையைக்கூட பல மாநிலங்கள் இலவச திட்டங்களுக்கு செலவிட்டது தனிக்கதை. தேவையான நிதியை ஒதுக்காமல் புலம்பும் மத்திய அரசு இந்த ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள் சுமார் 5 லட்சம் கோடி ருபாய் . இந்த சலுகைகளில் ஒரு பாதியை அளித்தால் ஒரு பெரும் மனித சமூகத்தின் முகத்தில் சிரிப்பைக் காணலாம். அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும் பொருளாதார உற்பத்தியின் காத்திரமான மனிதவளமாக அவர்கள் திகழ்வார்கள். மீண்டும் மீண்டும் வயிறு பசித்துக் கிடக்கும் இந்த மக்களை அரசு ஒரு சுமையாகவே கருதுகிறது. கிரிக்கெட் பேரங்களில் அலையும் நம் உணவு மற்றும் வேளாண் அமைச்சருக்கு இதை எல்லாம் யாராவது புரிய வைத்தால் உசிதம். அவர் கிரிக்கெட் வீரர்களின் வீட்டு நாய்களுக்கான உணவுக்கு இறக்குமதிவரியை ரத்து செய்வதில் பிசியாக அலைகிறார்.

மத்திய அரசு வறுமை மற்றும் பசி, பட்டினியைப் போக்க 22 திட்டங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக  நடை முறைப்படுத்தி வருகிறது. இதைவிட பசி- பட்டினியைப் போக்க ஒரு அமைச்சகம் தொடங்குவதுதான் தீர்வாக இருக்கும், மத்திய பிரதேசத்தில் போபால் விஷவாயு தொடர்பாக ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. வட்டார அளவில் உணவு தானிய கிட்டங்கிகள் நிறுவப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் பசியால் வாடும் போது அவர்களுக்குத்  தேவைப்படும் அன்றாட தானியத்தை ஏற்றுமதி செய்யும் அரசை எப்படி வகைப்படுத்துவது. இதைப் போலவே நம் அரசிற்கு சற்றும் குறைவில்லாதவர்களாக, நகர்ப்புறத்து மத்தியதர வர்க்கம் முதல் பணக்காரர்கள் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதில் ஒரு போட்டியே நிலவுகிறது. ஆடம்பர கல்யாணங்கள் முதல் இலையில் 25-35 வகை பலகாரங்கள் அடுக்கும் சாதாரன கல்யாணங்கள் வரை உணவைச் சற்றும் மதிக்காத ஒரு தலைமுறை நகரங்களில் வசித்து வளர்ந்து வருகிறது. இவர்களுக்கும் கூட உணவை வீணடிப்பது என்பது தங்களின் பகட்டின்  அடையாளமாகத் திகழ்கிறது. கொலின் கொன்சால்வேஸ் அந்த வழக்கில் 67,000 டன் தானியங்கள் அழுகி வருவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அது 2 லட்சம் பேருக்கு ஆறு மாதத்திற்கு உணவளிக்கப் போதுமானது. இதுவரை இந்திய அரசால் இப்படி வீணடிக்கப்பட்ட தானியங்களின் மூடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் மனிதன் நிலாவுக்கு நடந்தே போய் வரலாம். அப்படிச் செய்தால் ஆயிரம் ஆயிரம் கோடிகள் நிலாவுக்குச் செல்ல ராக்கெட் ஆராய்ச்சியின் செலவு மிச்சம்தானே. தானியங்களை வழங்காவிட்டால் பரவாயில்லை… மன் மோகன் அவர்களே, நிலாவுக்காவது போய்வர ஏற்பாடு செய்யுங்கள். 

 
muthusmail@gmail.com

என்ன நடக்கிறது?-13: "அதிர்ச்சித் தகவல்"

நேற்றுத்தான் பி.டி.கத்திரி பற்றி அவள் விகடனில் வெளியான ஜக்கி வாசுதேவ் அவர்களது எச்சரிக்கையைப் பதிவு செய்தேன். இன்று இமெயிலில் பேராசிரியர் சுப்பையா அருணாச்சலம் அவர்கள் அதிர்ச்சி தரும் அந்தச் செய்தியை அனுப்பியிருந்தார். அதன் விபரம் வருமாறு:

இந்திய அரசின் பயோடெக்னாலஜித் துறை சட்டம் ஒன்றை வடிவமைக்கிறது. அதன்படி மரபணு மாற்றம் செய்யப்பட உணவுகள் அல்லது மருந்துகளை எதிர்த்துப் பேசுவதோ, எழுதுவதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இது சட்டமாக்கப்பட்டால் ஆறு மாத சிறைத்தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.

தேவீந்தர் ஷர்மா அவர்களது வலைப்பூவில் பதிவு செய்யப்பட்ட தகவலை பேராசிரியர் எனக்கு அனுப்பியிருந்தார். நீங்களும் அந்தத் தகவலைப் படிக்கலாம்.

http://devinder-sharma.blogspot.com/2010/02/india-seeks-jail-for-gm-food-critics.html

இது குறித்து மெயில் டுடேயில் முதற் பக்கத்து செய்தியாக தினேஷ் ஷர்மா அவர்களது கட்டுரையையும் அவசியம் படியுங்கள்.

http://epaper.mailtoday.in/epaperhome.aspx?issue=1922010

நாட்டில் என்ன நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லை.

மேலே குறிப்பிட்ட இரண்டு செய்திகளையும் ஜூனியர் விகடன் போன்ற இதழ்களுக்கு அனுப்ப எண்ணியுள்ளேன். நீங்களும் இவற்றை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுசெல்வீர்கள் என்று நம்புகிறேன். நம் அனைவரின் எதிர்காலமும் பாதிக்கப்படலாம். உடனே செயல்படுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி: பேராசிரியர் சுப்பையா அருணாச்சலம், திரு தேவீந்தர் ஷர்மா, திரு தினேஷ் ஷர்மா மற்றும் மெயில் டுடே.

என்ன நடக்கிறது?-12: "ரூபாய் 59,000 கோடி வீண்: அமைச்சகங்களின் அலட்சியம்"

ஒதுக்கியும் செலவழிக்காததால் ரூபாய் 59,000 கோடி வீண்: அமைச்சகங்களின் அலட்சியம் என்ற தலைப்பில் தினமலர் நாளிதழில் (தினமலர், மதுரை, 21.2.2010) வெளியாகியிருந்த செய்தியை வேதனையுடன் படித்தேன். அதன் சுருக்கத்தை இங்கே தருகிறேன். என்ன நடக்கிறது?

மக்களுக்காகப் போடப்படும் அரசு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை, பல அமைச்சகங்கள் அலட்சியப்படுத்தி, அவற்றைப் பயன்படுத்தாது வீணாக்குகின்றன. மத்திய கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வுண்மை வெளிவந்துள்ளது. மோசமான திட்டமிடல், சரியான கண்காணிப்பின்மை போன்ற காரணங்களால் இந்த வீணடிப்பு நடந்திருக்கிறது. அதிலும் நலவாழ்வு, கல்வி, கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம், உணவு, பொது விநியோகம், காவல்துறை, பாதுகாப்புத்துறை, அணுசக்தித்துறை ஆகிவற்றின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்தான் இது நடந்திருக்கிறது.

என்ன நடக்கிறது?

நன்றி: தினமலர் நாளிதழ்.

என்ன நடக்கிறது?-11: "குடோனா, பள்ளியறையா?"

…. இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை வகுப்பறையில் அடுக்கிவிட்டு, குழந்தைகளை வெட்டவெளியில் உடகாரவைத்து பாடம் நடத்திய பள்ளியை, தமிழகத்தில்தான் பார்க்க முடியும். …..

இது உங்கள் இடத்தில்” ‘வியப்பான தகவல்!’ என்ற தலைப்பில் சென்னையிலிருந்து திரு கே.என்.ஸ்ரீதரன் அவர்கள் எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதி. (தினமலர், ஜனவரி 30, 2010)

நன்றி: திரு கே.என்.ஸ்ரீதரன் மற்றும் தினமலர் நாளிதழ்.

என்ன நடக்கிறது?-10: "வருமான வரி விபரத்தை வெளியிடாத கோடீஸ்வர வேட்பாளர்கள்"

* இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்டத் தேர்தலில் மனு தாக்கல் செய்த கோடீஸ்வர வேட்பாளர்களில் 68% பேர் வருமான வரி செலுத்தியதற்கான விபரத்தை வெளியிடவில்லை.

* சென்ற தேர்தலில் போட்டியிட்ட கோடீஸ்வர வேட்பாளர்கள் 9 சதவிகிதம்; இம்முறை 14 சதவிகிதம்.

* முதல்கட்ட தேர்தலில் 193 கோடீஸ்வரர்களும், இரண்டாவது கட்ட தேர்தலில் 288 கோடீஸ்வரர்களும், மூன்றாவது கட்ட தேர்தலில் 196 கோடீஸ்வரர்களும் போட்டியிடுகின்றனர்.

* டில்லியைச் சேர்ந்த பகுஜன் கட்சி வேட்பாளர் தனக்கு ரூபாய் அறுநூறு கோடிக்கும் மேலாக சொத்து இருப்பதாகக் காட்டியுள்ளார்.

* மனுத்தாக்கலின் போது இந்தக் கோடீஸ்வர வேட்பாளர்களில் பலருக்கு வருமான வரி கணக்கிற்கான நிரந்தர அட்டை (PAN card) இல்லை.

* பான்கார்டு (PAN card) இல்லையென்றால் ரூபாய் பத்தாயிரம் அபரதாமும், வரி ஏய்ப்பு செய்த தொகையைப்போல் 100 முதல் 300 சதவிகிதம் வரை அபராதம் கட்டவேண்டும். செய்வார்களா?

நன்றி: தினமலர், தமிழ் நாளிதழ், மதுரைப் பதிப்பு, 30.4.2009.

என்ன நடக்கிறது?-9: "ஒரே மழைக்கு சாலைகள் வாய் பிளந்தது ஏன்?"

சமீபத்தில் போடப்பட்ட பெரும்பாலான சாலைகளில் தற்போது ஜல்லி கற்கள்தான் உள்ளன. இதுபற்றி, சாலைகளைப் போட்ட கான்ட்ராக்டர்களோ, நிதி ஒதுக்கிய அரசோ கவலைப்படவில்லை. மாறாக, மீண்டும் அந்த இடங்களில் சாலைகளைப்போட நிதி ஒதுக்கும் பணியைத் துவக்கிவிட்டனர்.
முந்தைய காலங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டால், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது; அவ்வளவு தரமானதாக இருந்தது. ஆனால், தற்போது போடப்படும் சாலைகள் ஓராண்டுகூட தாக்குப்பிடிப்பதில்லை.
சமீபகாலமாக, தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் ஏராளமான சாலைப்பணிகள் நடந்தன. தற்போது பெய்த மழையில், இந்தப்பணிகளின் தரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. சாலைகளின் மேல் மணல் போல ஜல்லிக்கல்தான் உள்ளன. இவற்றில் பல சாலைகள், ஆறு மதங்களுக்குள் போடப்பட்டவை.
தரமற்ற சாலைப்பணிகள் மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான். மாநகராட்சி அளவில் சாலைப்பணி நடந்தால், கவுன்சிலரில் இருந்து, அனைத்து தரப்புக்கும் கமிஷன் கொடுத்தால்தான் டெண்டரே கிடைக்கும். முப்பது சதவிகிதம் வரை கமிஷனாகக் கொடுத்துவிட்டு, பதினைந்து சதவிகிதம் லாபமும் வைத்து காண்ட்ராக்டர்கள் பனி செய்தால், ஐம்பத்தைந்து சதவிகித அளவில்தான் தரம் இருக்கும்.
நெடுஞ்சாலைத்துறை மூலம் போடப்படும் சாலைகளின் தரமும் இவ்வாறுதான் உள்ளன. தற்போதுள்ள நிலையில், இதுவே அதிக பட்ச தரம் என்று திருப்திப்படும் நிலையில் அதிகாரிகள் உள்ளனர். சாலைகளின் தரத்தை உறுதி செய்த பின்னர்தான் காண்ட்ராக்டர்களுக்கு முழுமையாக நிதி வழங்கப்படுகிறது. அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுத்துவிடுவதால், தரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
‘சாலைப்பணிகள் மேற்கொள்ளும்போது, எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை, எத்தனை கிலோமீட்டர் தூரம் அந்தப்பணி நடைபெற்றது? பணியை மேற்கொண்ட காண்ட்ராக்டர் யார்? எந்தத் தேதியில் பணி நிறைவடைந்தது? எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டது? பணியை கண்காணித்த பொறியாளர் யார்? என்பது போன்ற விவரங்கள் சாலை ஓரத்தில் வைக்க வேண்டும்’ என்ற விதியை அரசு கொண்டு வந்தது. ஆனால், இதுபோன்ற பலகைகள் பெரும்பாலும் வைக்கப்படுவதில்லை. அவ்வாறு வைத்திருந்தால், சாலைப்பணியில் நடந்த ஊழல் நிச்சயமாக அந்தந்தப் பகுதி பொதுமக்களுக்கு தெரிய வந்திருக்கும்.
சாலை போடாமலேயே போட்டதாக கணக்கு காட்டுதல், பள்ளம் மேடுகளை மட்டும் சரிசெய்துவிட்டு மொத்தமாக சாலை போட்டதாக கணக்கு காட்டுதல், அதிக நிதியை வாங்கிக்கொண்டு குறைந்த செலவில் சாலை போடுதல் போன்ற முறைகேடுகள் இதன் மூலம் தடுக்கப்பட்டிருக்கும். அடுத்ததாக, தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுத் திட்டம், தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளால் அரசியல்வாதிகள் பலருக்குத்தான் கோடிகள் கிடைக்கும் என்ற மக்களின் சந்தேகத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
நன்றி: தினமலர் சிறப்பு நிருபர், தினமலர், மதுரை, 7.12.2008.

என்ன நடக்கிறது?-8: "பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியரே இல்லை!"

நாடு முழுவதும் பள்ளிகள் செயல்பாடு குறித்த ஆய்வு சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆரம்பப் பள்ளிகளில் மூன்றில் இரண்டு பங்கு தலைமை ஆசிரியர் இல்லாமலேயே செயல்படுகின்றன. மகராஷ்ட்ரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 65% பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. ஏழு மாநிலங்களில் 70% பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இல்லை. பத்து மாநிலங்களில் 20% ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் வசதி இல்லாது அவதிப்படுகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 90% அதிகமான ஆரம்பப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. 78% பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இல்லை.
தினகரன் (மதுரைப் பதிப்பு), டிசம்பர் 27, 2008 இதழில் வெளியான செய்தியில் ஒரு பகுதி.
நன்றி: தினகரன்.

என்ன நடக்கிறது?-7: "அரிசி ஒரு ரூபாய், சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய்!"

தினமலர் வார இதழில் ஒரு வாசகர் தமது உள்ளக்குமுறலை ஒரு கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் நாட்டில் பல பேருந்து நிலையங்களில் சிறுநீர் கழிக்க வசூலிக்கப்படும் கட்டணம் இரண்டு ரூபாய். ஆனால் அந்த கழிப்பிடங்களுக்குள் நுழைந்து, புதிதாக ஏதாவது நோய் கொள்முதல் செய்யாமல் வருபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வெளிச்சம் கிடையாது, பராமரிப்பு கிடையாது, சமயத்தில் தண்ணீரும் இருக்காது. மூக்கைக் கையில் பிடித்தபடியேதான் உள்ளே செல்லவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இரண்டு ரூபாயா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அரசியல்வாதிகள் பினாமிகள் மூலமாக ஒப்பந்தம் பெற்று, பணம் குவிப்பதிலேயே குறியாக இருப்பதால் பராமரிப்புச் செலவு செய்யப்படுவதில்லை. யாராவது ஏதாவது கேட்டால் அடி, உதைதான். முதலில் கழிப்பிடங்கள் பணம் சம்பாதிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ளனவா அல்லது மக்களின் ஆரோக்கியத்திற்காக சேவை நோக்கில் கட்டப்பட்டிருக்கின்றனவா என்பது தெளிவாக வேண்டும். சேவை நோக்கம் என்பது உண்மையானால் கழிப்பிடங்களை தொண்டு நிறுவனங்களோ அல்லது பராமரிப்புச் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பெரிய தொழில் நிறுவனங்களோ நிர்வகிக்க வேண்டும். நடக்குமா?

என்ன நடக்கிறது?-6: "கட்டிடத் தொழிலாளர்களுக்காக வசூலித்த 940 கோடி ரூபாய் எங்கே?"

கட்டிடத் தொழிலாளர்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த, கட்டுமானத் தொழிலில் உள்ள ‘பில்டர்களிடம்’ இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தீர்வையாக மாநில அரசுகள் வசூலிக்கின்றன. 1996-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் நலச்சட்டத்தின் கீழ் இந்த தீர்வை வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் தொகை சரிவர வசூலிக்கப்படுவதும் இல்லை, தொழிலாளர் நலனுக்காகச் செல்விடப்படுவதும் இல்லை. சில மாநிலங்களே வசூலித்து, அந்தத் தொகையில் மிகச்சிறிய அளவில் செலவழிக்கின்றன என்று தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு பதிவு செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் மிகவும் வேதனை அடைந்தனர். அவர்கள் கூறுகையில், திட்டங்களை அமல்படுத்தவேண்டிய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் அசட்டையாக இருந்துள்ளது வேதனை தருகிறது. இது தொடர்பான பதில் அறிக்கையை நான்கு வாரத்துக்குள் மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளனர். இது தொடர்பாக மனுதாரர் சார்பில் ஆஜரான சுப்ரீம் கோர்ட் சீனியர் வக்கீல் காலின் கொன்சால்வஸ் தெரிவித்தாவது: “இந்தியாவின் தலைநகரமான டில்லி மாநிலத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஏகப்பட்ட கட்டுமான திட்டங்கள் நடந்துவருகின்றன. மேலும், பலமாடிக் குடியிருப்பு, வர்த்தக கட்டிடங்கள் கட்டும் பணிகளும் நடக்கின்றன. இதற்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆனால் டில்லி அரசு, இதுவரை வசூலித்த 140 கோடியில் ஒரு பைசா கூட, கட்டிடத்தொழிலாலர்களுக்குச் செலவழிக்கவில்லை. மத்தியப் பிரதேச மாநில அரசு 174 கோடி ரூபாய் வசூலித்துள்ளது; அதில் ஒன்பது கோடி ரூபாய் மதிப்புக்கு மட்டுமே திட்டங்களைத் தீட்டி அமல் படுத்தியுள்ளது. மேற்கு வங்க அரசு இதுவரை இரண்டரைக் கோடி மட்டுமே வசூல் செய்து, அதில் வெறும் இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு மட்டுமே தொழிலாளர்களுக்காகச் செலவழித்துள்ளது. தமிழகம் 246 கோடி வசூலித்துள்ளது. குஜராத் 91 கோடி வசூலித்துள்ளது.
தகவல்: தினமலர், மதுரை, டிசம்பர் 9, 2008.
நன்றி: தினமலர்.

என்ன நடக்கிறது?-5: "தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி"

நவம்பர் 16, 2008 தினகரன் நாளிதழ் மதுரைப் பதிப்பில் இந்த செய்தி வெளியாகி உள்ளது: (“பீட்டர் மாமா: தாத்தா வீட்டுக் கல்யாணம்”) நிலக்கரி இறக்குமதி செய்ததில் தமிழக மின்துறை சிக்கலில் மாட்டியுள்ளதாக ஹேஷ்யம் வெளியாகியிருக்கிறது. டன் 143 டாலர் விலையில் 45000 டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாம். சென்னைத் துறைமுகம் வந்தபிறகுதான் தெரிய வந்ததாம், அக்கரி அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் கரியே இல்லை என்பது. சீக்கிரம் சாம்பலாகக் கூடிய, சாதாரணக் கரிதான் வந்துள்ளது. அதனால் அதைத் துறைமுகத்திலே கிடக்க விட்டுள்ளார்கள். இந்த இறக்குமதியிலும் ஊழல் இருப்பதாக சிலர் வழக்குத் தொடரத் தயாராக இருக்கிறார்களாம்.
நன்றி: தினகரன்

என்ன நடக்கிறது?-4: "கேள்வித்தாள் அச்சிட மறந்த பல்கலைக்கழகம்"

தேர்வுக்கான வினாத்தாள்களை அச்சடிக்காமல் பல்கலைக்கழகம் மறந்துவிட்டது. இதனால், தேர்வு எழுதவந்த மாணவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர். மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ், மும்பை, தானே மற்றும் ரத்னகிரியில் உள்ள 19 மையங்களில் தேர்வு நடக்கவிருந்தது. மொத்தம் 90 மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றனர். அப்போது, தேர்வைக் கண்காணிக்கும் அதிகாரிகள், மாணவர்களுக்கு வழங்குவதற்கான வினாத்தாள்களை தேடியபோது, அது கிடைக்கவில்லை. அங்கும், இங்கும் அலைந்த பின்னர், பல்கலைக்கழகத்தில் இருந்தே வினாத்தாட்கள் வரவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு பேசினர். அப்போதுதான், அன்று நடக்கவிருந்த தேர்வுக்கான கேள்வித்தாள்களே அச்சிடப்படவில்லை என்பதை பல்கலை நிர்வாகத்தினர் கண்டுபிடித்தனர்.
தினமலர், மதுரை, 8.11.2008 அன்று வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி.

என்ன நடக்கிறது?-3: "74 அரசு பள்ளிகளில் எட்டு மாதமாக மின்சாரம் துண்டிப்பு"

18.11.௦08 தினகரன் நாளிதழில் வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி:
சென்னிமலை ஒன்றியத்தில் ௭௪ அரசு பள்ளிகளில் கடந்த எட்டு மாதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. கணினி, டிவிடி மூலம் கல்வி கற்கமுடியாமல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நன்றி: “தினகரன்” நாளிதழ்.

என்ன நடக்கிறது?-3: 74 அரசு பள்ளிகளில் எட்டு மாதமாக மின்சாரம் துண்டிப்பு"

18.11.08 தினகரன் நாளிதழில் வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி:
சென்னிமலை ஒன்றியத்தில் 74 அரசு பள்ளிகளில் கடந்த எட்டு மாதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. கணினி, டிவிடி மூலம் கல்வி கற்கமுடியாமல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நன்றி: “தினகரன்” நாளிதழ்.

என்ன நடக்கிறது?-2: "கறுப்புப்பணம் கொட்டிக் கிடக்குது ஸ்விஸ் வங்கியில்!"

வேற்று நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப்பணம் சுமார் 64 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவலை, நவம்பர் 5, 2008 குமுதம் இதழில் வெளியாகியுள்ள புஷ்கின்ராஜ்குமாரின் கட்டுரை தெரிவிக்கிறது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானது இந்தப் பணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபச்சாரம், புளு பிலிம் மற்றும் சூதாட்டத்திற்கு இந்தப் பணம் பயன்படுத்தப் படுவதாகவும் கூறப்படுகிறது.

லீச்டென்ஸ்டீன் என்கிற சிறிய நாட்டின் எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப்பணம் வைத்திருந்த வெளிநாட்டவர்கள் பற்றிய தகவலை ஜெர்மானிய நாட்டின் புலனாய்வுத்துறை சேகரித்துள்ளது. அதனிடமிருந்து பல நாடுகள் தங்கள் நாட்டவர்களின் கறுப்புப்பண விபரங்களைக் கேட்டறிந்து, அந்தக் கறுப்புப்பணத்தை தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வங்கியிலும் இந்தியர்கள் பலர் கறுப்புப்பணத்தை வைத்துள்ளனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டால் பெயர் உட்பட அனைத்துத் தகவல்களையும் தருவதாக ஜெர்மானிய புலனாய்வுத்துறை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலருமான திரு மோகனகிருஷ்ணன், டெல்லி உச்சநீதி மன்றத்தில் இதுகுறித்து பொது நல வழக்குத் தொடர ஆயத்தமாகி வருகிறார். நிச்சயம் அந்தக் கறுப்புப்பணப் பட்டியலை வெளியிட வைப்பேன் என்கிறார் அவர்.

நன்றி: திரு புஷ்கின்ராஜ்குமார், திரு மோகனகிருஷ்ணன் & குமுதம்.

என்ன நடக்கிறது?-2: "கறுப்புப்பணம் கொட்டிக் கிடக்குது ஸ்விஸ் வங்கியில்!"

வேற்று நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப்பணம் சுமார் 64 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவலை, நவம்பர் 5, 2008 குமுதம் இதழில் வெளியாகியுள்ள புஷ்கின்ராஜ்குமாரின் கட்டுரை தெரிவிக்கிறது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானது இந்தப் பணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபச்சாரம், புளு பிலிம் மற்றும் சூதாட்டத்திற்கு இந்தப் பணம் பயன்படுத்தப் படுவதாகவும் கூறப்படுகிறது.

லீச்டென்ஸ்டீன் என்கிற சிறிய நாட்டின் எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப்பணம் வைத்திருந்த வெளிநாட்டவர்கள் பற்றிய தகவலை ஜெர்மானிய நாட்டின் புலனாய்வுத்துறை சேகரித்துள்ளது. அதனிடமிருந்து பல நாடுகள் தங்கள் நாட்டவர்களின் கறுப்புப்பண விபரங்களைக் கேட்டறிந்து, அந்தக் கறுப்புப்பணத்தை தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வங்கியிலும் இந்தியர்கள் பலர் கறுப்புப்பணத்தை வைத்துள்ளனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டால் பெயர் உட்பட அனைத்துத் தகவல்களையும் தருவதாக ஜெர்மானிய புலனாய்வுத்துறை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலருமான திரு மோகனகிருஷ்ணன், டெல்லி உச்சநீதி மன்றத்தில் இதுகுறித்து பொது நல வழக்குத் தொடர ஆயத்தமாகி வருகிறார். நிச்சயம் அந்தக் கறுப்புப்பணப் பட்டியலை வெளியிட வைப்பேன் என்கிறார் அவர்.

நன்றி: திரு புஷ்கின்ராஜ்குமார், திரு மோகனகிருஷ்ணன் & குமுதம்.

என்ன நடக்கிறது?-1: "மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடுகள் ஏன் பயன்படுத்தப்படவில்லை?"

அரக்கோணத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் பேசியதிலிருந்து:
“மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு திட்டங்கள் சென்றடையும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி குறிப்பிட்டார். ஆனால், மத்திய சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

* கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுகாதாரத்துறை 1850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
* சென்னை எழும்பூர் மருத்துவமனையை மேம்படுத்த நூறு கோடி ரூபாய் ஒதுக்கி, இரு ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி நடக்கவில்லை.
* இரத்த அணுக்கள் அமைக்க இருநூற்று ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* முதியோர் சுகாதார வசதிக்காக ஐம்பது கோடி ஒதுக்கினோம். இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
* தேசீய சித்த ஆராய்ச்சி மையம் அமைக்க சென்னையில் ஐந்து ஏக்கர் இடம் கேட்டோம். ஆனால் தமிழக அரசு இடத்தை ஒதுக்கவில்லை.

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்”.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

என்ன நடக்கிறது?-1:

அரக்கோணத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் பேசியதிலிருந்து:
“மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு திட்டங்கள் சென்றடையும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி குறிப்பிட்டார். ஆனால், மத்திய சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

* கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுகாதாரத்துறை 1850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
* சென்னை எழும்பூர் மருத்துவமனையை மேம்படுத்த நூறு கோடி ரூபாய் ஒதுக்கி, இரு ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி நடக்கவில்லை.
* இரத்த அணுக்கள் அமைக்க இருநூற்று ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* முதியோர் சுகாதார வசதிக்காக ஐம்பது கோடி ஒதுக்கினோம். இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
* தேசீய சித்த ஆராய்ச்சி மையம் அமைக்க சென்னையில் ஐந்து ஏக்கர் இடம் கேட்டோம். ஆனால் தமிழக அரசு இடத்தை ஒதுக்கவில்லை.

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்”.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.