உள்ளத் துணர்வே உயர்வு.
வெள்ளம் வெள்ளமாக நூற்பெருக்கை மூளையால் அளந்தாலும், தனது உள்ளத்தில் எழும் கடவுள் உணர்வே உயர்ந்த அறிவாகும்.
வெள்ளம் வெள்ளமாக நூற்பெருக்கை மூளையால் அளந்தாலும், தனது உள்ளத்தில் எழும் கடவுள் உணர்வே உயர்ந்த அறிவாகும்.
தீரர் வளரும் இனிய கல்வியளித்தலே ஈகைகளிற் சிறந்தது. அத்தகைய கல்வி கொடுத்தவனுக்குப் பெரும் புகழாகும். அதைப் பெற்றவனுக்கும் எங்கு சென்றாலும் புகழாகும்.
சர்வாத்ம சமரசத்திற்கு சர்வ மத சமரசம் துணை செய்யும். அருட்புலவர் வாக்கெல்லாம் ஈசன் திருமொழிகளே. அவை உள்ளத்திலுள்ள சுத்தான்மாவினின்றே மலர்கின்றன. அத்திருவாக்குகளை எங்கே, எவ்வினத்தார், எம்மதத்தார் சொன்னாலும் ஆசையுடனே, ஆர்வமுடனே விரும்பிக் கேட்பதே அறிவாகும்.
துறக்கமாவது சுவர்க்கம், மோக்ஷம். அதன் இன்பம் பெரிதுதான். அதை விடப் பெரிய இன்பம் ஒன்றுள்ளது; அதுவே, எல்லா உயிர்களையும் தான் என்றெண்ணி அன்பு செய்யும் ஆனந்தம்! அந்த இன்பம் யாரைச் சேரும்? தன்னலம் விட்டுப் பிறர் நலமே போற்றி, அறப்பணி செய்து வாழும் பெரியாரையே அந்த இன்பம் தானாக வந்தெய்தும்.
மனிதனை இன்பநிலை சேராது தடுப்பான பழமையான மூன்று அழுக்குகள்:- மோகவெறி, மாயாபாசம், தன்னல அகந்தை. இவை நீங்குக. எப்படி இவற்றை நீக்குவது? முத்தூய்மை, அதாவது மன, மொழி, மெய்த் தூய்மை ஓங்கவேண்டும். இவ்வாறு மலமொழிந்து அமலமானோர் தேவராவார். அத்தகைய சுத்த தேவர் குலம் உலகிற் செழித்தோங்குக!
நாணுறல் : அடக்கம், கௌரவம், மரியாதை, விநயம், பிறர் பழியும், தன் பழியும் அஞ்சல், நோகாது நோவுறுத்தாது, பிறர் மனம் சுளிக்காது, சீர்மையுடன் நடத்தல். வெட்டெனப் பேசாமை, சூதுவாதின்மை, நாய்ச்சினம், நரிவஞ்சம், பாம்புச் சீற்றம், அகங்கரிப்புகள் இன்றி பெருந்தன்மை பிடித்தொழுகல் முதலியன நாண் எனப்படும். நாகரிகத்தின் நல்லுயிர் நாணே.
இந்த ஆறு தீமைகளால் இருள் வறுமை, துன்பம், நோய், மதிமயக்கம், இடர், இன்னல்கள் எல்லாம் சூழ்ந்து மனித வாழ்வை நரகமாக்கும்.
இவையே, உலகோர் உய்யத் தத்துவப் பெரியாரும், வித்தகப் புலவரும் பலவாறாகச் சொன்ன உபடேசங்களின் சாரமாகும். இவற்றைச் சிந்தித்தொழுகுக. இவை விண்ணின்பம் அளிப்பன.
அற்புதமான (வியன்செய்) அறநூல் வானினும் விரிந்தது. அதிற் காணும் இயலுண்மைகள் விண்மீன்களை விடப் பலவாம். ‘உடு’ என்றால் நட்சத்திரம்.
ஒவ்வொருவர் உள்ளத்தும் சுத்தான்மக்கதிர் நிலவுகிறது. அதுவே உள்ளொளி. அதனின்றே உயிர்வாழ்வு மலர வேண்டும். அத்தகைய வாழ்வே அத்யாத்ம வாழ்வு. அது சுத்த சமரச வாழ்வு. என் சாதி, என் மதம் என்ற மூடப் பிடிவாதங்கொண்டு தொல்லை செய்து உலகிற் சண்டை விளைவிக்கும் சாதிமதப் பூசல்கள் அத்தகைய சுத்தான்ம சமரச வாழ்விற்கில்லை.
இறைவன் தந்தை; அவனருளே தாய்; உயிர்கள் அவனருள் மைந்தர். இவ்வாறு உலகமெல்லாம் ஒரு அருட்குலமாக, தெய்வஜாதியாக ஒற்றுமைப்பட்டு, மன்க்கலாமாகச் செழித்தோங்க வேண்டும். அதற்கேற்ற பொதுநிலை வாழ்வை சர்வாத்ம சமரச உணர்ச்சி கொண்டு நிலைநாட்டுக. அதனால் எல்லா நன்மையையும் உண்டாகும்.
மனத்தளர்வை நீக்கு. எல்லாக் கட்டுக்களினின்றும் விடுதலை பெறு. இந்த உலகில் வீரனாக, ஆத்ம தீரனாகப் பலருக்கும் பயன்பட வாழ விரும்பு.
மனிதன் முதலில் சரீர தருமத்தைக் கவனிக்கவேண்டும். உண்ண, உடுக்க, இருக்கப் போதுமான உணவு, உடை, மனை முதலிய சௌகரியங்களை நல்ல யோக்கியமான தொழிலின் முயற்சி செய்து பெறவேண்டும்,. இது, அறவழி வாழ்வின் மாண்பாகும்.
இவ்வுடலிற் புகுந்த ஆன்மா எப்போது இதை விட்டுப் போகும், வேறு எந்த உடலுடன் மீண்டு வரும் என்று நாம் அறியோம். இந்த உடல் உள்ளபோதே நல்ல அறவினைகளைச் செய்க.
நம்மைத் தொடர்ந்த மனித மனித சமுதாயத்தினிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? பிறரிடம் எது கெடுதல் என்று நோட்டம் பார்த்து, குட்ட்ரமே பாராட்டி அவர்களை இகழக்கூடாது. பிறரிடம் எது நன்மை, எது உத்தமமான குணம் என்று கவனிக்கவேண்டும். அதை நாமும் பேணி, அதன்படி செய்து, நன்மை பெறுதலே அறிவாகும்.
நாகரிகம் பெற்ற செல்வன், சுகபோகங்களைச் சுயனலத்திர்கே பயன்படுத்தாது, தன்னைத் தொடர்ந்த, தன்னினமான, மாந்தரின் துன்பத்தைத் துடைக்கப் பயன்படுத்தவேண்டும். அவர்களுக்குற்ற இடர்களைத் தன்னால் இயன்ற மட்டும் தவிர்க்கவேண்டும். இன்றேல், அவன் தனக்குரிய கடமையினின்று வழுவியோனாவன்.
‘இது பழைய வழக்கம், பழைய ஆசாரம், முன்னோர் வகுத்தது’ என்று திருப்பித் திருப்பி பல்லவி பாடிக்கொண்டு காலமுன்னேற்றத்தின் குறுக்கே நில்லாதே. ‘புதுமை, புதுமை, புதுவாழ்வு, புதுநினைப்பு, புதிய சுயேச்சை வேண்டும்’ என்று சொல்லி முன்னேறிச் செல்.
நல்வினை செய்வதில் காலத்தையும் கருதவேண்டும். காலத்திற்கேற்ற பொதுநலம் எது எது என்று தோன்றுகிறதோ, அத்தை வீன்வாதங்களில் பொழுது போக்காமல் நிறைவேற்றி இன்புறுக.
உடல் பிரிந்தபின், ஜீவா யாத்திரை எப்படியோ, அது எங்கே செல்லுமோ, அது ஏக்கதியாமோ, எவ்வுடளிர் புகுமோ, நாம் உறுதியாக அறியோம். இதோ, கண்ணார் காணும் இடமகன்ற உலகம் உள்ளது. அதில் மேலான திருவினைகளை, சுபகாரியங்களை, அறைனைகளை செய்க.