பாரதி கவிதைகள்-1: "பராசக்தி"

பாரதி கவிதைகள்-1: “பராசக்தி”

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்

நானிலத்தவர் மேனிலை எய்தவும்

பாட்டிலே தனியின்பத்தை நாட்டவும்

பண்ணிலே களிகூட்டவும் வேண்டி நான்

மூட்டும் அன்புக் கனலோடு வாணியை

முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்

காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்

கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.



மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்

வானிருண்டு கரும்புயல் கூடியே

இழையும் மின்னல் சரேலென்று பாயவும்

ஈர வாடை இரைந்தொலி செய்யவும்

உழைஎலாம் இடையின்றி இவ்வான நீர்

ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்

“மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்!

வாழ்க தாய்!” என்று பாடும் என் வாணியே.

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்

சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்;

அல்லினுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்

அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,

கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்,

புல்லினில் வயிரப்படை தோன்றுங்கால்,

பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!



பாரதியின் “பராசக்தியிலிருந்து” ஒரு பகுதி.

Leave a comment